குமரி பாதிரியார் வழக்கு விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் திடீர் மாயம்: ஆபாச வீடியோக்களை பரப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள்

நாகர்கோவில்: குமரி பாதிரியார் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வர வேண்டிய பெண் ஒருவர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஆபாச வீடியோக்களை பரப்பியவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த சூழால் குடையால் விளை என்ற இடத்தை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29) இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை, மிரட்டி லேப் டாப், செல்போன்கள் பறிக்கப்பட்டதாக அவர் கூறினார். இதில் லேப் டாப்பை போலீசார் கைப்பற்றினர். பறிக்கப்பட்ட செல்போன் இன்னும் கிடைக்க வில்லை. அந்த செல்போனை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். பாதிரியாரின் செல்போனில் வேறு ஏதாவது ஆபாச படங்கள் உள்ளதா என்பதும் தெரியவில்லை? அவரது செல்போனில் ஆபாச படங்கள் இருந்தால் அது வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவரை வெளியான படங்கள் யார் மூலம் வெளியானது என்பது கண்டுபிடிக்கப்பட வில்லை. இது தொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்காக ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பாதிரியார் வழக்கில் விசாரணைக்கு வர வேண்டிய இளம்பெண் ஒருவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது சாட்சியம் முக்கியமானதாக கருதப்படுவதால், அவரிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையை தற்போது காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. வாட்ஸ் அப் சாட்டிங், வீடியோ, போட்டோக்களில் உள்ள அனைத்து இளம்பெண்களிடமும் விசாரணை நடத்தப்படும். காவல் நிலையங்களுக்கு அவர்களை அழைக்காமல், நேரடியாக அவர்களின் வீடுகளுக்கே சென்று ரகசிய வாக்குமூலம் பெறப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.