தருமபுரியில் 4 வழிச் சாலைக்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் கட்கரிக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் நன்றி

புதுடெல்லி: தருமபுரி மாவட்டம் A பள்ளிப்பட்டி முதல் மாவட்ட எல்லை மஞ்சவாடி வரை நான்குவழிச் சாலை அமைக்க மத்திய அரசு ரூ.170 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக, அத்தொகுதியின் திமுக எம்.பி. டாக்டர்.டிஎன்விஎஸ்.செந்தில்குமார், மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தருமபுரி நாடாளுமன்ற எம்,பி.,யான டாக்டர்.செந்தில்குமார், தன் தொகுதியின் மஞ்சவாடி கணவாய் முதல் மாவட்ட எல்லை முடியும் வரை உள்ள 2 வழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் முதல் கட்டமாக வாணியம்பாடி முதல் A பள்ளிப்பட்டி வரை நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்து தற்பொழுது மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பிறகு, A.பள்ளிப்பட்டி முதல் மஞ்சவாடி கணவாய் வரை மீதமுள்ள 18 கிலோமீட்டர் இரண்டுவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என தொடர்ந்து எம்பி செந்தில்குமார் கோரி வந்தார். இதற்காக, மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை சந்தித்து வலியுறுத்தி வந்தார் .

இந்நிலையில், திமுக எம்.பி. செந்தில்குமாரின் கோரிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஏற்றுள்ளார். இதில், சேலம் திருப்பத்தூர் வாணியம்பாடி நான்குவழிச் சாலை NH179 A தருமபுரி மாவட்டத்தில் உள்ள மீதமுள்ள 18 கிலோமீட்டர் A.பள்ளிப்பட்டியிலிருந்து வெள்ளையப்பன் கோவில் மஞ்சவாடி கணவாய் தருமபுரி மாவட்ட எல்லை வரை நான்கு வழி பாதை அமைக்க 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனுமதி வழங்கிய மத்திய அமைச்சர் நித்தின் கட்கரிக்கு தருமபுரி எம்.பி.செந்தில்குமார் ட்விட்டரில் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இச்சாலையால் சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி. அரூா். வாணியம்பாடி வழியாக சென்னை செல்பவர்களுக்கு பயண தூரம் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.