ஹிட்லர்.. இடிஅமீன் வரிசையில் மோடி ஆட்சி – வைகோ, கனிமொழி கொந்தளிப்பு..!

2019 இல் மோடி பற்றி அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வந்த 24 மணி நேரத்தில் இந்த அவசர நடவடிக்கைக்கு பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல்தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வைகோ,

ஆகியோர் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக எம்பி கனிமொழி தனது ட்வீட்டில், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவே ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். இது பழி வாங்கும் நடவடிக்கை. நமது குரல்கள் சத்தமாக மாறும், ஜனநாயகத்தின் கொள்கைகளை மதிக்காத சக்திகளுக்கு எதிரான நமது பிணைப்பு மேலும் வலுவடையும். நாங்கள் ராகுல் காந்தியுடன் நிற்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதேபோல, பாஜகவை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மிக ஆவேசமாக பேசியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல் காந்தி பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசினார் என்று குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில், விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தி, இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது நீதியைக் குழிதோண்டிப் புதைத்த செயலாகும்.

இதைக் காரணம் காட்டி, 24 மணி நேரத்திற்குள், ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை நீக்கிவிட்டதாக மக்களவையில் மிருகத்தனமாக பெரும்பான்மை கொண்டிருக்கின்ற ஆணவத்தில் பாஜக இந்த அக்கிரமச் செயலைச் செய்திருக்கிறது. ஜெர்மனியில் ஹிட்லர் நடத்திய நாசிசத்தைப் போல, இத்தாலியில் முசோலினி நடத்திய பாசிசத்தைப் போல, உகண்டாவில் இடிஅமீன் நடத்திய கொடுங்கோல் ஆட்சியைப் போல, நரேந்திர மோடி அரசு செயல்படுகிறது. விநாசகால விபரீத புத்தி என்று கூறுவதற்கு ஏற்ப இந்தத் தகுதி நீக்கத்தை செய்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகள் தண்டனை என்று சொன்னாலும், பிணையில் வருவதற்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றமே தந்திருக்கிறது. நாட்டு மக்கள் இதற்கெல்லாம் சேர்த்து நரேந்திர மோடி அரசுக்கு தண்டனை கொடுப்பார்கள்” என்று வைகோ கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.