LPL போட்டியின் நான்காம் தொடர் ஜூலை 31ஆம் திகதி ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 போட்டியின் நான்காவது தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மொத்தம் ஐந்து அணிகள் பங்கெடுக்கும் LPL தொடர் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத காலப்பகுதியில் நடாத்துவதற்கு ஏற்கனவே இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிடப்பட்ட நிலையில், நான்காவது தொடர் போட்டிகள் ஜூலை 31ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் என உறுதிப்படுத்தியுள்ளது.

‘நாங்கள் இந்த தொடரினை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடாத்த தீர்மானித்திருப்பதோடு, குறிப்பிட்ட காலப்பகுதியில் திறமை மிக்க வெளிநாட்டு வீரர்களை இலங்கை மண்ணை நோக்கி கவர்வதற்கும் எதிர்பார்த்திருக்கின்றோம்.’ என லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளர் சமன்த தொடவெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு அணிகளும் 14 இலங்கை வீரர்களையும், 6 வெளிநாட்டு வீரர்களையும் உள்ளடக்கி, மொத்தம் 20 பேர் கொண்ட அணிகளாக பங்கு கொள்ள முடியும் என்றும் இலங்கை கிரிக்கெட் சபை மேலும் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.