வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூரி. அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக வளம் வந்தார். தற்போது கதாநாயகனாக விஸ்வரூபம் எடுத்து விடுதலை என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில், ‘விடுதலை’ திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு ‘ஏ’ சான்றிதழும் வழங்கியுள்ளது. அந்த வகையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில், விடுதலை திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்தவர்களிடம் குழந்தைகளை அழைத்துச் செல்ல திரையரங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, மக்கள் திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது திரைப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், மக்கள் அனைவரும் காரணம் தெரியாமல் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களை வெளியேற்ற முயன்றதால் திரையரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதனால், போலீசார் வேறு வழியில்லாமல் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், ‘விடுதலை’ திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.