காவிரி டெல்டாவில் நிலக்கரி திட்டமா? தமிழக அரசு அனுமதிக்காது – அமைச்சர் உதயநிதி உறுதி!

தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதியளிக்காது என்று அமைச்சர்

தெரிவித்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுப்பதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளதாகவும் ஓரத்தநாடு தாலுகாவில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடையே பேசியுள்ளார். “தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்படாது. அதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது. இது தொடர்பாக நாளை முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகத்தின் உணவுக் கோப்பையாக திகழும் காவிரி பாசன மாவட்டங்களை நிலக்கரி சுரங்கங்கள் வாயிலாக சீரழிப்பதற்கு ஆதரவாக இருக்கக் கூடாது. இதைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி மூன்றாவது சுரங்கத் திட்டம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்கள் ஆகியவற்றுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது; அந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தித் தராது என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதியளிக்க வேண்டும். அதன் மூலம் தமிழக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.