"டேஞ்சர்".. அருணாச்சலுக்கு "பெயர்" சூட்டிய சீனா.. அடுத்த "மூவ்" இதுதானா..? எல்லையில் "ஹை அலர்ட்"

இட்டாநகர்:
இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை குறிவைத்து சீக்ரெட்டாக காய் நகர்த்தி வரும் சீனா, தற்போது அம்மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் இந்த பெயர் சூட்டல் நடவடிக்கை ஒருபுறம் இருக்க, அதே நேரத்தில் இந்திய எல்லைக்கு அருகே அதிகப்படியான ராணுவ வீரர்களையும் அந்நாடு குவித்து வருகிறது.

இதன் காரணமாக, இந்தியாவும் அருணாச்சல் மற்றும் லடாக் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.

அடிபட்ட புலி “சீனா”

இந்தியாவின்அருணாச்சலப் பிரதேசத்தை நீண்ட நெடுங்காலமாக சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அம்மாநிலத்தை கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை சீனா எடுத்த போதிலும், இந்தியாவிடம் அவை எடுபடவில்லை. இந்த சூழலில்தான், கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் படையினரை இந்திய ராணுவ வீரர்கள் துரத்தியடித்தனர். இந்த மோதலில் சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர்.

சர்வதேச அவமானம்

லடாக்கில் பெற்ற அடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டாருக்குள் 300-க்கும் மேற்பட்ட சீனப் படையினர் உருட்டுக்கட்டை, இரும்பு ராடு போன்ற ஆயுதங்களுடன் அதிரடியாக நுழைந்தனர். ஆனால், வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் சேர்ந்து 300 சீனப் படையினரை வெறும் கைகளாலேயே அடித்து விரட்டினர். உலக வல்லரசு என சொல்லிக்கொள்ளும் சீனா, இந்திய ராணுவ வீரர்களிடம் அடிபட்டு திரும்பியதை மேற்கத்திய ஊடகங்கள் எள்ளி நகையாடின. இதனை தனக்கு நேர்ந்த சர்வதேச அவமானமாக சீனா கருதுகிறது.

பெயர் சூட்டிய சீனா

இதன் தொடர்ச்சியாகவே, இந்திய எல்லையை ஒட்டிய பகுதி நெடுகிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது. இதனால் இந்தியாவும் சீன எல்லையில் படை பலத்தையும், ஆயுத தளவாடங்களையும் பெருக்கி இருக்கிறது. இந்த சூழலில்தான், தற்போது மீண்டும் சேட்டையை காட்ட தொடங்கியிருக்கிறது சீனா. அதன்படி, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு சீன அரசாங்கம் தனது ‘மேன்டேரின்’ (Mandarin) மொழியில் நேற்று அதிகாரப்பூர்வமாக பெயர் வைத்து அறிவிப்பை வெளியிட்டது.

எல்லையில் பதற்றம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான அதே சமயத்தில், இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் கூடுதலான ராணுவ வீரர்களை சீனா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்திய – சீன எல்லையில் பதற்றமான சூழலும் காணப்படுகிறது. இதனிடையே, சீனாவின் இந்த பெயர் சூட்டல் நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வைப்பதால் மட்டும் உண்மையை மாற்ற முடியாது.. அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவுக்கு சொந்தமானதுதான்” எனத் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.