`தூக்கத்திலேயே பிரிந்த உயிர்;கடைசி ஆசை நிறைவேறியது!' – கலங்கும் நடிகை விஜயலட்சுமியின் மகள்

`ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது’ படத்தின் மூலம் திரைத்துறைக்குள் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தொடர்களிலும் நடித்து இருக்கிறார். `பாரதி கண்ணம்மா’ சீசன் 1-ல் கண்ணம்மாவின் பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றவர். இன்று அதிகாலை தூக்கத்திலேயே இவர் உயிர் பிரிந்திருக்கிறது.

விஜயலட்சுமி

அவர் முன்னதாக நமக்கு அளித்த பேட்டியில், `எனக்கு சாகும்வரை நடிக்கணும்னு ஆசை’ எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும், கமல் எனக்கு நெருங்கிய நண்பர். ரஜினி அண்ணன் மாதிரி. சினிமாவுக்கு பிரேக் கொடுத்த பிறகு அவங்க கூட தொடர்பில்லாம போயிடுச்சு!’ எனக் கூறியிருந்தார். நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிரபலமாக தனது நடிப்பைத் திறமையை வெளிப்படுத்திய இவர் சிறந்த டான்சரும் கூட!

அவருடைய மகள் கிரண்மயி உடன் பேசினோம். `அம்மாவுக்கு நடிக்கணும்னு ரொம்ப ஆசை. பாரதி கண்ணம்மாவுக்குப் பிறகு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் வந்துச்சு. அவங்க உடல்நிலை ஒத்துழைக்காததனால நடிக்காம இருந்தாங்க. சுகர் பிரச்னை இருந்தது. அதுக்காக மாத்திரை போட்டுட்டு இருந்தாங்க. இன்னைக்கு காலையில் தூக்கத்திலேயே அம்மா உயிர் பிரிஞ்சிடுச்சு. அம்மா எப்பவும் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாதுன்னு நினைப்பாங்க. இன்னைக்கே இறுதிச் சடங்கையும் செய்துட்டோம். வெள்ளித்திரை, சின்னத்திரை பிரபலங்கள் சிலர் இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்தாங்க!’ என்றார்.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.