துருக்கி அதிபர் தேர்தல் 2023: மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் எர்டோகன்

அங்காரா: துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த மறு தேர்தலில் அவர் பெரும்பான்மையைப் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார்.

69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி – சிரிய எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களால் 50,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று அதிபர் எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பொருளாதார ரீதியாகவும் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை இருந்தது.

இதையடுத்துதான், துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர்.

இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே கடந்த 15 ஆம் தேதி துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றனர்.

துருக்கியின் அரசியல் வழக்கம்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் நேற்று மே 28-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் 99% வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட சூழலில் எர்டோகன் 52% வாக்குகளும் அவரை எதிர்த்திப் போட்டியிட்ட கெமால் 48 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். இது அதிகாரபூர்வ தகவல். இந்நிலையில் துருக்கி தேர்தல் ஆணையமும் எர்டோகன் வெற்றியை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 1 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு அதில் கெமால் நிறையா வாக்குகள் பெற்றாலும்கூட இந்த 52 சதவீதத்தை நெருங்க இயலாது என்பதால் வெற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தன்னை நம்பி மேலும் 5 ஆண்டுகள் அளித்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். அதேபோல், ஏற்கெனவே 21 ஆண்டுகள் ஆட்சி செய்ததால் இப்போது மக்கள் நம்பிக்கையின் பேரில் அளித்துள்ள வாக்குகளுக்கு உரிய நன்மை செய்வேன் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.