மலையாளத்தில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த '2018'

மலையாளத் திரையுலகத்தில் 100 கோடி வசூலைப் பார்ப்பதே பெரிய ஒரு விஷயம். முதன் முதலில் 100 கோடி வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையை ஏழு வருடங்களுக்கு முன்பு வெளிவந்த மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம்தான் படைத்தது. அதற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களில் ஆறு படங்கள் மட்டுமே அந்த சாதனையைப் படைத்துள்ளன.

இதுவரையிலும் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தைப் பிடித்த படமாக 'புலி முருகன்' படம் மட்டுமே இருந்தது. அந்தப் படத்தின் மொத்த வசூல் 134 கோடி. அந்த வசூல் சாதனையை மூன்று வாரங்களுக்குள்ளாகவே முறியடித்துள்ளது '2018' திரைப்படம். ஜுட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினீத் சீனிவாசன், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, தன்வி ராம் மற்றும் பலர் நடித்த அப்படம் மே 5ம் தேதி மலையாளத்தில் வெளியானது. கடந்த வாரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.

தற்போது 150 கோடி வசூலைக் கடந்து மலையாளத் திரைப்படங்களில் அதிக வசூலைக் குவித்து நம்பர் 1 இடத்தைப் பிடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.