மதுரை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட மத்திய பாஜக அரசு ஒப்புதல் தந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கவே செய்யும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: இந்திய ரயில்வே துறை வரலாற்றில் இதுவரை இல்லாத கொடூரமான விபத்து நிகழ்ந்துள்ளது. இப்போது தொழில்நுட்ப கோளாறா? சதிவேலையா என்கிற பிரச்சனை எழுந்துள்ளது. இதில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
ஒருவேளை இந்த விபத்து ஒரு சதியாக இருந்தால், அப்படிச் செய்தவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. ஏனெனில் இந்த விபத்தில் 300 பேர் பலியாகி உள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். பொதுமக்களிடையே ரயில் பயணம் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதான ஒரு அச்சம் உருவாகிவிட்டது. ஆகையால் உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும்; இதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை தர வேண்டும்.
கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட நீன்டகாலமாக முயற்சிக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்னரே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து 1000 பேருடன் போராட்டம் நடத்தி இருக்கிறேன். ஆனால் அப்போதும் மேகதாது அணை கட்டியே தீருவோம் என சொல்லி நிதி ஒதுக்கியது கர்நாடகா மாநில அரசு. கர்நாடகாவின் இந்தப் போக்கை மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்த்தால் பெரும் கேடாக முடியக் கூடிய நிலைமைதான் உருவாகும்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு மத்திய பாஜக அரசு வஞ்சகம் செய்யத்தான் செய்யும். கபினி, கிருஷ்ணராஜ சாகரில் இருந்து தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை வரவிடாமல் தடுத்துவிட்டால் தமிழ்நாடு பஞ்சபிரதேசமாக உருமாறிப் போய்விடும். மேகதாது அணை விவகாரம் என்பது தமிழ்நாட்டின் தலைக்கு மேலே தொங்குகிற கத்தியாகத்தான் இருக்கிறது. இவ்வாறு வைகோ கூறினார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையிலேயே மேகதாது அணை கட்ட ரூ9,000 கோடி நிதி ஒதுக்குவோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் முதல் ஆலோசனை கூட்டத்திலேயே மேகதாது அணை விவாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் அமைச்சர்களும் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.