கிரகஜோதி திட்ட இணைய சர்வரை முடக்க மத்திய அரசு முயற்சி; மந்திரி சதீஸ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு

பெலகாவி:

பொதுப்பணித்துறை மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அநீதி இழைக்கப்பட்டது

நாங்கள் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்க முடிவு செய்துள்ளோம். அதை தடுக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அரிசி ஒதுக்க மறுக்கிறது. மத்திய அரசிடம் 7 லட்சம் டன் அரிசி கையிருப்பு உள்ளது. அதில் 2 லட்சம் டன் அரிசி வழங்குமாறு கேட்கிறோம். ஆனால் அரிசி கொடுக்க மறுக்கிறார்கள். கர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்ட போதும், கர்நாடகத்திற்கு நிதி உதவி வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டது.

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கையை மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு தான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். அரிசியுடன் சோளம், ராகியை வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறோம். பிற மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிரகஜோதி திட்டத்தில் சேவா சிந்து இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கம் பணி தொடங்கப்பட்டுள்ளது.

உத்தரவாத திட்டங்கள்

இந்த பக்கத்தின் ‘சர்வா்’ விரைவாக செயல்படுவது இல்லை. இந்த சேவா சிந்து இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்கிறது. இதை தடுக்க எவ்வளவு முயற்சி மேற்கொண்டாலும், காங்கிரசின் உத்தரவாத திட்டங்களை நாங்கள் அமல்படுத்தியே தீருவோம்.

இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.