Sarfaraz Khan Exclusion: இந்திய கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறை பலருக்கும் மிகவும் புதிராக இருப்பதாக பரவலாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. வரும் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான வீரர்களை பிசிசிஐ அறிவித்த பிறகு, உள்நாட்டு சூப்பர் ஸ்டாராக விளங்கும் சர்ஃபராஸ் கானுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க மறுப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு
பலரும் டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டு, ஜெய்ஸ்வாலுக்கு பிசிசிஐயின் தேர்வுக்குழு வாய்ப்பு வழங்கியது விமர்சித்து வரும் நிலையில், சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏற்புடையது அல்ல எனவும் வாதிட்டு வருகின்றனர்.
ரஞ்சியில் அசத்தும் சர்ஃபராஸ்
அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ராவும் கூட, ரஞ்சி கோப்பையின் கடைசி இரண்டு தொடர்களிலும் சர்ஃபராஸ் கான் அடித்த ரன்கள் மலையளவு இருந்தபோதிலும், அவர் ஓரங்கட்டப்படுவதை கண்டு அதிர்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் தர கிரிக்கெட் தொடர்களில் தொடர்ந்து அதிக ரன்களை குவித்து வருபவரான சர்ஃபராஸ் கான், இந்திய டெஸ்ட் அணியில் கூட நுழைய முடியவில்லை.
பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்
ஆகாஷ் சோப்ரா, தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட ஒரு வீடியோவில், சர்ஃபராஸ் டெஸ்ட் அணியில் இல்லாததன் பின்னணியில் உள்ள காரணத்தை தேர்வுக்குழுவினர் பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கூறி, முதல் தர கிரிக்கெட்டின் பேட்டிங்கில் எல்லாவற்றையும் சர்ஃபராஸ் கான் சரியாகச் செய்து வருகிறார் என அவருக்கு தனது ஆதரவையும் தெரிவித்தார்.
ஏன் தேர்வு செய்யவில்லை?
“சர்ஃபராஸ் என்ன செய்ய வேண்டும்? கடந்த 3 வருடங்களில் அவரது ரன்களை பார்த்தால், அவர் மற்றவர்களை விட முன்னணியில் இருக்கிறார். அவர் எல்லாவிதத்திலும் நல்ல மதிப்பெண்களை பெற்றிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், தேர்வுக்குழு அதன் மூலம் என்ன செய்தியை சொல்ல வருகிறது?” என ஆகாஷ் சோப்ரா கேள்வியெழுப்பி வருகிறது.
சர்ஃபராஸ் இனி என்ன தான் செய்ய வேண்டும்?
“இது கேட்க வேண்டிய கேள்வி. உங்களுக்கும் எனக்கும் தெரியாத வேறு ஏதாவது காரணம் இருந்தால், அதைப் பகிரங்கப்படுத்துங்கள். சர்ஃபராஸைப் பற்றிய குறிப்பிட்ட விஷயம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள், அதனால்தான் நீங்கள் அவருக்கு வாய்ப்பில்லை வழங்கவில்லை என சொல்லுங்கள். ஆனால் எங்களுக்கு அப்படி ஏதும் இருப்பது போல் தெரியவில்லை. அதுகுறித்து யாரும் சர்ஃபராஸிடம் பேசினார்களே என்றும் தெரியவில்லை” என ஆகாஷ் சோப்ரா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்
டெஸ்ட் அணிக்கு வாய்ப்பை பெற மிக முக்கியமான தளமாக கருதப்படுவது முதல் தர கிரிக்கெட் ஆகும். ஆனால், சர்ஃபராஸ் கான் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை, மேலும் பலரைப் போலவே ஆகாஷ் சோப்ராவும் இதுகுறித்து அதிருப்தியை தெரிவித்துள்ளார். “முதல் தர போட்டிகளில் எடுத்த ரன்களுக்கு மதிப்பளிக்காவிட்டால், அது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்” என்று முன்னாள் இந்திய வீரர் கூறினார்.
சர்ஃபராஸ் கான், 2022-23 ரஞ்சி டிராபி தொடரில், 6 ஆட்டங்களில் விளையாடி 3 சதங்கள் உட்பட 92.66 சராசரியில் 556 ரன்கள் குவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IND vs WI: இவருக்கு எதற்கு துணை கேப்டன்? பிசிசிஐக்கு தொடரும் எதிர்ப்பு!