என் பர்சனல் விஷயத்தில் தலையிட கங்கனாவுக்கு உரிமை இல்லை : நவாசுதீன் சித்திக் மனைவி காட்டம்

பாலிவுட் நடிகை கங்கனா ரணத்துக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைத்துக் கொண்டே வருவார். அதேசமயம் ஒருவரை பிடித்து விட்டது என்றால் அவர்கள் பின்னணியில் என்ன சர்ச்சையான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கி விடுவார். அப்படித்தான் கடந்த சில மாதங்களாகவே பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திகிற்கும் அவரது மனைவி ஆலியாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விவாகரத்துக்கான விண்ணப்பிப்பு இதெல்லாம் சர்ச்சையாக பேசப்பட்டு வரும் நிலையில் நவாசுதீன் சித்திக்கிற்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளார் கங்கனா.

சமீபத்தில் தனது மனைவி ஆலியா குறித்து ஒரு கடுமையான அறிக்கை ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் நவாசுதீன் சித்திக். இது குறித்து ஆதரவாக கருத்து தெரிவித்த கங்கனா, “இந்த நேரத்தில் தேவையான ஒன்றுதான் இது.. மௌனம் ஒருபோதும் அமைதியை கொண்டு வந்து தராது நவாசுதீன் சார்.. உங்களுடைய இந்த அறிக்கையை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

கங்கனா முதன்முறையாக தயாரிப்பாளராக மாறி தயாரித்துள்ள 'டிக்கு வெட்ஸ் ஷெரு' என்கிற படத்தில் கதாநாயகனாக நவாசுதீன் சித்திக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் துவங்கிய பிக்பாஸ் ஓடிடி சீசன் 2வில் போட்டியாளராக பங்கேற்ற ஆலியா சித்திக் ஒரே வாரத்திலேயே அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வெளிவந்த நிலையில் கங்கனாவின் இந்த பதிவு அவரை கோபப்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் கூறும்போது, “கங்கனா எப்போதுமே தனக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். அதுமட்டுமல்ல தவறான நபர்களுக்கு எப்போதுமே வக்காலத்து வாங்கும் முதல் நபராக அவர் இருக்கிறார். ஒருவேளை நவாசுதீன் சித்திக்கை வைத்து அவர் தயாரித்துள்ள தனது படத்திற்கு எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காக இப்படி அவருக்கு சப்பைக்கட்டு கட்டுகிறாரோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.