சாமி தரிசனத்திற்கு ரெடியா? இதோ ஆன்லைன் புக்கிங்… கர்நாடகா கோயில்களில் தரமான ஏற்பாடு!

கர்நாடகாவில் உள்ள கோயில்களை அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை (Muzrai) பராமரித்து வருகிறது. தற்போது அங்குள்ள பெரிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பெண் பக்தர்களின் கூட்டம். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆளும் காங்கிரஸ் அரசின் சக்தி (Shakti) திட்டம். இதன்மூலம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

பெண்களுக்கு இலவச பயணம்

நாளுக்கு நாள் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இவர்கள் வேலை, வர்த்தகம், கோயில், சுற்றுலா எனப் பல்வேறு விஷயங்களுக்கு பயணம் செய்கின்றனர். அதில் கோயில்களில் தரிசனம் செய்வது பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் சில வசதிகளை பெற முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் வகையில் ஆன்லைன் வசதியை கொண்டு வர கர்நாடகா அரசின் இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

கோயில்களில் சாமி தரிசனம்

இதற்காக karnatakatemplesaccomodation.com என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அடுத்த சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. ஆன்லைன் வசதி மூலம் கோயில்களில் அடிப்படை வசதிகள், பிரசாதம், தரிசனம் (APD) ஆகிய மூன்றும் ஒழுங்குபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள ஏதேனும் ஒரு பெரிய கோயிலில் தரிசனம் செய்ய வேண்டுமெனில், அதுதொடர்பான முழுமையான தகவல்களை அரசின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆன்லைன் புக்கிங்

இத்தகைய நடவடிக்கையால் வெளிப்படையான தரிசனத்தை உறுதி செய்ய முடியும். குறிப்பாக கோயில்களில் தரிசனம் செய்ய வருவோர் அனைத்து விதமான தகவல்களையும் ஆன்லைன் இணையதளம் மூலம் பெற முடியும். தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துவிட்டால் போதும். டைம் ஸ்லாட் (Time Slot) கொடுத்து விடுவார்கள். அந்த நேரத்தில் சென்று தரிசனம் செய்து விட்டு வந்து கொண்டே இருக்கலாம்.

முதல்கட்ட ஏற்பாடு

நீண்ட வரிசையில் தேவையின்றி மணிக்கணக்கில் காத்திருக்க தேவையில்லை. முதல்கட்டமாக கர்நாடகாவில் உள்ள 330 ஏ மற்றும் பி பிரிவு கோயில்களில் ஆன்லைன் தரிசன புக்கிங் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. மாநிலம் முழுவதும் 34 ஆயிரம் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இவை ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மொபைல் ஆப் வசதி

இங்கு தரிசனம் செய்ய செல்லும் போது தங்கும் வகையில் அரசின் சார்பில் 2,000 விடுதிகள் இருக்கின்றன. இதுதவிர பெரிய கோயில்களுக்கு பிரத்யேக மொபைல் ஆப்பை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது முதல்கட்டமாக 175 ஏ பிரிவு கோயில்களுக்கு அமல்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொபைல் ஆப் மூலம் தரிசன டிக்கெட்கள், தங்குமிடங்கள், பிற தரிசன சேவைகள் உள்ளிட்டவற்றை பெற்று கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.