ரோகித்தின் அந்த ஒரு சதம்… தென்னாப்பிரிக்கா தோல்வி… இது 2019 ரீவைண்ட்

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. டேபிள் டாப்பராக இருக்கும் இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டி இது. இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மினி அரையிறுதி போட்டி என்று கூட சொல்லலாம். இந்திய அணி ஒரு போட்டிகளில் கூட தோற்கவில்லை, தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்து போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் கம்பீரமான வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியிலும் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையையும் அந்த அணி வெளிப்படையாக கூறியிருக்கிறது. 

தென்னாப்பிரிக்கா வீரர் வாண்டர் துசென் பேசும்போது, இந்திய அணியை இந்தியாவில் ஏற்கனவே நாங்கள் வீழ்த்தியிருக்கிறோம் என்பதால், இந்த உலக கோப்பை சவாலையும் நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம் என கூறியிருக்கிறார். அவர் அப்படி கூறுவதற்கு காரணம், ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியே இந்திய அணியை அதிக முறை வீழ்த்தியிருக்கிறது. உலக கோப்பையிலும் தென்னாப்பிரிக்கா அணியே அதிக வெற்றிகளை இந்தியாவுக்கு எதிராக பெற்றிருக்கிறது. ஆனாலும் கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணியே அதிக வெற்றிகளை தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு உலக கோப்பைகளிலும் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி இம்முறையும் அதனை தொடரும் முனைப்பில் இருக்கிறது. குறிப்பாக 2019 ஆம் ஆண்டு இப்போதைய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் அபாரமான சதம் காரணமாக 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி.

144 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா 122 ரன்கள் விளாசினார். அந்த உலக கோப்பையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக அடித்த சதத்துடன் சேர்த்து மொத்தம் 5 சதங்கள் விளாசி, ஓர் உலக கோப்பையில் அதிக  சதங்களை விளாசியவர்கள் பட்டியலில் இடம்பிடித்தவர். இந்த உலக கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேப்டன் ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியிலும் தன்னுடைய வழக்கமான ஸ்டார் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நிலைத்து நின்று விளையாடும்பட்சத்தில் இந்தியஅணியின் வெற்றியை நிச்சயம் தென்னாப்பிரிக்கா அணியால் பறிக்க முடியாது. அதேபோல் விராட் கோலியும் நல்ல பார்மில் இருக்கிறார். அவரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மிக சூப்பரான ரெக்கார்டுகளை வைத்திருப்பதால், விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தையும் மீண்டுமொரு முறை எதிர்பார்க்கலாம். அதனால், நாளைய கொல்கத்தா போட்டியில் இந்தியாவின் ஆதிக்கம் நிச்சயம் தொடரும் என்பதே ரசிக்ரகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.