தூத்துக்குடி: `கொலை முயற்சி சம்பவத்துக்குப் பழி தீர்க்கவே கொன்றோம்!' – போலீஸாரை அதிரவைத்த சிறார்கள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருண் பாரதி. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனீஸ். இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் கோவில்பட்டி பைபாஸ் சாலையிலுள்ள அய்யனார் கோயில் பின்புறம் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அனீஸைத் தாக்கிவிட்டு அருண் பாரதியை அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றது.

உயிரிழந்த அருண்பாரதி

இதில், தலை துண்டாகி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அருண் பாரதி  உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸார், கொலையான அருண் பாரதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார்,  வழக்கு பதிவுசெய்து  விசாரணை நடத்தி வந்தனர்.

அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கோவில்பட்டியைச் சேர்ந்த 18 வயது  இளைஞர் மற்றும் 2 சிறார்கள், அருண்பாரதியை கொலைசெய்தது தெரியவந்தது. கோவில்பட்டி, இனாம் மணியாச்சியை சேர்ந்த முத்துராமன் மற்றும் ராஜபாண்டி ஆகிய இரு கோஷ்டிகளுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது முத்துராமன் கோஷ்டியைச் சேர்ந்த சிலரை ராஜபாண்டி கோஷ்டியினர் அரிவாளல் வெட்டியுள்ளனர். அந்த சம்பவத்தில் ராஜபாண்டி கோஷ்டியில் அருண் பாரதி இருந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அருண் பாரதி

போலீஸாரால் அருண் பாரதி கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்து,  கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் ஜாமீனில் அருண் பாரதி வெளியே வந்துள்ளார். இந்த நிலையில்தான் அருண்பாரதி கொலைசெய்யப்பட்டுள்ளார். “மூணு மாசத்துக்கு முன்னால எங்க நண்பரை அரிவாளால் வெட்டி கொலைசெய்ய முயன்ற கும்பலில் அருண் பாரதியும் ஒருவர். அந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு பழிதீர்க்கும் விதமாகத்தான் அருண் பாரதியை கொன்றோம்” எனச் சொல்லி விசாரணையில் போலீஸாரையே அதிர வைத்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.