தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்; இந்திய வேகப்பந்து வீச்சாளர் பங்கேற்பது சந்தேகம்..?

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டியின் டாசின் போது மருத்துவ அவசரநிலை காரணமாக சாஹர் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீபக் சாஹரின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தான் அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார் என்பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து தீபக் சாஹர் கூறியதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நான் ஏன் விளையாடவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். என் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

அவரது உடல்நிலை தற்போது சிறப்பாக உள்ளது. எனக்கு என் அப்பா ரொம்ப முக்கியம். என்னால் அவரை இந்த நிலையில் விட்டுவிட்டு எங்கும் செல்லவும் முடியாது. அவர் உடல்நிலை சரியான பின்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எனது பயணத்தைத் தொடங்குவேன்.

என் தந்தையின் உடல்நிலையைப் பொறுத்தது. இப்போதைக்கு அவனை விட்டுட்டு போக முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் வரும் 10 தேதி தொடங்க உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தீபக் சாஹர் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.