கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் இந்து. நாம் ராமரை வணங்க மாட்டோமா… அவர்கள் (பா.ஜ.க.) மட்டும்தான் வணங்குகிறார்களா… ராமர் கோயில்களை நாம் கட்டவில்லையா… ராமர் பஜனைகளை நாம் பாடவில்லையா… எங்கள் கிராமத்தில் டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் பஜனை பாடுவார்கள்.
அந்த பஜனைகளில் நானும் பங்கு கொள்வேன். இது போன்ற நிகழ்வுகள் மற்ற கிராமங்களிலும் நடைமுறையில் இருக்கின்றன. அவர்கள் (பாஜக) மட்டும்தான் இந்துவா… நாங்கள் இந்துக்கள் இல்லையா…. எனவே, இந்துத்துவா என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்துத்துவா வேறு, இந்து தர்மம் வேறு. நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல…
நான் ஓர் இந்து, ஆனால் மதவாதத்தையும் இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன். எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை… ஆனால் இந்துத்துவா கொலை மற்றும் மக்களிடம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது. ராமர் கோயில் கட்டுவதை எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், அதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத்தான் எதிர்த்துக் கேள்வி கேட்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அயோத்தியில் ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்தை ஜனவரி 22-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சித்தராமையா இத்தகைய கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.