மத்திய பட்ஜெட் நாட்டை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும்: சித்தராமையா கருத்து

பெங்களூரு,

மத்திய பட்ஜெட் குறித்து முதல்மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. வேலையின்மை, வறட்சி, விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து எதுவும் கூறவில்லை. நாட்டின் மொத்த கடன் ரூ.190 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இதையும் கூறவில்லை. இது ஒரு இடைக்கால பட்ஜெட். பட்ஜெட் அளவு ரூ.47 லட்சத்து 65 ஆயிரத்து 758 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதில் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 494 கோடி கடன் மூலமாக திரட்டுகிறார்கள்.

இந்த பட்ஜெட்டில் மக்களிடம் மூடிமறைத்ததே அதிகம். நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து எதுவும் கூறவில்லை. வேலையின்மை, விலைவாசி உயர்வு பற்றி பேசவில்லை. இது நாட்டை அழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட். விவசாயிகளின் விளைபொருட்கள் அனைத்தும் குறைந்தபட்ச ஆதார விலையின் கீழ் கொண்டு வர வேண்டும். தனியார் நிறுவனங்கள் மீதான வரியை குறைத்துள்ளனர். மீதமுள்ள பாரத்தை ஏழைநடுத்தர மக்கள் மீது சுமத்தியுள்ளனர். ஏழைகள், பெண்கள், சிறுபான்மையினர், தலித் விரோத பட்ஜெட். இந்த பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.