IND vs ENG: விராட் கோலி இந்தியாவிலேயே இல்லையா? கடைசி 3 டெஸ்ட்டும் டவுட்?

India vs England: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்திய அணி தொடரில் 1-0 என பின்தங்கியுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.  ஆனால், தற்போது அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வெளியான தகவலின் படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விராட் கோலி விவகாரத்தில் தனியுரிமை கோரியுள்ளது. தற்போது விராட் கோலி இந்தியாவில் இல்லை என்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறுவது சந்தேகம் என்றும் அறிக்கை  கூறுகிறது.

Prep mode #TeamIndia get into the groove for the nd #INDvENG Test in Vizag @IDFCFIRSTBank pic.twitter.com/BiN0XjLzMu

— BCCI (@BCCI) January 31, 2024

ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான முதல் இரண்டு போட்டிக்கான அணியில் முதலில் விராட் கோலி இடம் பெற்று இருந்தார்.  ஆனால், முதல் டெஸ்ட் போட்டி தொடங்கும் சில நாட்களுக்கு முன்பு விராட் கோலி இந்த தொடரில் இருந்து விலகியதாக செய்திகள்  வெளியானது. பின்பு, பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தெரிவித்து இருந்தது. மேலும்,  கேப்டன் ரோஹித் சர்மா, அணியின் நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழுவிடம் இந்த முடிவு குறித்து பேசியதாகவும் பிசிசிஐ தெளிவுபடுத்தியது.  இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி முன்னணி வீரர்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறது.  

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விபத்து காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக கிரிக்கெட் விளையாடவில்லை. மேலும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.  கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை போட்டிக்கு பின்பு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.  இதற்கிடையில், முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் விளையாட மாட்டார்கள். 

மூன்றாவது டெஸ்ட் பிப்ரவரி 15ம் தேதி ராஜ்கோடிலும், நான்காவது டெஸ்ட் பிப்ரவரி 23ம் தேதி ராஞ்சியிலும் மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7ம் தேதி தர்மஷாலாவில் தொடங்க உள்ளது.  இந்திய அணி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இன்னும் அறிவிக்கவில்லை.  இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அப்போது தான் விராட் கோலி விளையாடுவாரா இல்லையா என்பது தெளிவாக தெரியும்.

2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (WK), துருவ் ஜூரல் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (WC), அவேஷ் கான், ரஜத் படிதார், சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.