கர்நாடகாவில் பாஜகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை: குமாரசாமி தகவல்

பெங்களூரு: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள மஜதவுக்கு தொகுதிகள் பங்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மஜத தலைவர் குமாரசாமி அதனை மறுத்துள்ளார்.

வருகிற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் அண்மையில் இணைந்தது. இதில் மஜதவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதேவேளை இரு கட்சிகளுக்கு இடையே மண்டியா, பெங்களூரு ஊரகம் ஆகிய தொகுதிகளை பங்கீடு செய்வதில் இழுபறி நீடிப்பதாக நேற்று செய்திகள் வெளியானது.

இதுகுறித்து கர்நாடக‌ மஜத தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக மஜத கூட்டணி வலுவாக உள்ளது. இதில் குழப்பத்தை ஏற்படுத்த காங்கிரஸார் முயல்கின்றனர். தொகுதிகள் பங்கீடு செய்வதில் எந்த குழப்பமும் இல்லை. தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பதிலும் இழுபறி இல்லை. எங்கள் தரப்பில் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. எங்களது கூட்டணி கர்நாடகாவில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

பாஜக மேலிடத் தலைவர்களுடன் 2 கட்டங்களாக பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளேன். பிப்ரவரி 28ம் தேதிக்கு பின்னர் தொகுதிகள் பங்கீடு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் தொகுதிகளை நாங்கள் பறிக்க மாட்டோம். பெங்களூரு ஊரக தொகுதியில் என் மைத்துனர் மஞ்சுநாத்தை நிறுத்துவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.