திருச்சூர் தொகுதியில் போட்டியிடும் சுரேஷ்கோபி

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்ததாக அரசியலை நோக்கி தான் குறிவைத்து நகர்ந்து வருகிறார்கள். ஆனால் கேரளாவை பொறுத்தவரை நடிகர்களும் சரி, அங்குள்ள ரசிகர்களும் சரி சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் சமீப வருடங்களாக சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் நுழைவது அதிகரிக்க துவங்கியுள்ளது.

அந்த வகையில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் பிரபல நடிகராக மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருந்து வரும் நடிகர் சுரேஷ்கோபி கடந்த 2016ல் அரசியலில் அடி எடுத்து வைத்து பா.ஜ., கட்சியில் இணைந்தார். அந்த வருடமே ராஜ்யசபா எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அதே சமயம் 2019 நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார்.

தனது அரசியல் நுழைவுக்காக சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் விலகி இருந்த சுரேஷ்கோபி, மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்த நிலையில் வர இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் மீண்டும் திருச்சூர் தொகுதியில் அவர் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.