ரஞ்சி டிராபி அரையிறுதி; போட்டியின் முதல் நாளில் காலை 9 மணிக்கே நாங்கள் தோற்று விட்டோம் – தமிழ்நாடு பயிற்சியாளர்

மும்பை,

ரஞ்சிக் கோப்பை 2024 டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் தமிழ்நாடு அணியை இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை 48-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

முன்னதாக இந்த தொடரில் இளம் வீரர் சாய் கிஷோர் தலைமையில் லீக் மற்றும் காலிறுதியில் வெற்றி கண்ட தமிழ்நாடு 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக அரையிறுதிக்கு வந்தது. அதனால் இம்முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம் என்று ஆவலுடன் தமிழக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட தமிழக அணி மும்பையிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இந்நிலையில் இப்போட்டியில டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தான் தோல்வியை கொடுத்ததாக தமிழக அணியின் பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி பரபரப்பான விமர்சனத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பிட்ச்சை நான் பார்த்ததும் எங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது. காலிறுதியில் அவர்கள் வித்தியாசமான பிட்ச்சில் விளையாடினார்கள். அதைப் பார்த்த நான் இந்த அரையிறுதி பிட்ச் வேகத்துக்கு சாதகமாக மிகவும் கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனால் போட்டியை நாங்கள் வெல்வதற்கு சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும்.

எப்போதும் நான் நேரடியாக பேசி விடுவேன். இந்த போட்டியின் முதல் நாள் காலை 9 மணிக்கே நாங்கள் தோற்று விட்டோம். டாஸ் வென்ற எங்களுக்கு அனைத்தும் கிடைத்தது. நான் மும்பையை சேர்ந்த நபர் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் எனக்கு நன்றாக தெரியும்.

இங்கே நாங்கள் முதலில் பந்து வீசியிருக்க வேண்டும். ஆனால் எங்களுடைய கேப்டன் வேறு உள்ளுணர்வைக் கொண்டிருந்தார். அவர் தான் எங்கள் அணியின் பாஸ். பிட்ச், எதிரணியின் மனநிலை என்ன என்பதை பற்றிய உள்ளீடுகளை என்னால் வழங்க முடியும். இப்போட்டியில் முதலில் பந்து வீசுவதற்காக நாங்கள் மனதளவில் தயாராக இருந்தோம்.

ஆனால் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது எங்களுடைய பேட்ஸ்மேன்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் காலிறுதியில் 3-வது விளையாடிய அவர் 65 ரன்கள் அடித்து வெற்றியில் பங்காற்றினார். அந்த வகையில் இப்போட்டியில் அவர் வித்தியாசமான உள்ளுணர்வை கொண்டு டாஸ் முடிவை எடுத்தார்.

எனவே கேப்டனை நான் குற்றம் சொல்ல மாட்டேன். கடந்த 7 – 8 வருடங்களில் வேறு வீரர்கள் தலைமையில் அரையிறுதி வராத தமிழ்நாடு அணி அவரது தலைமையில் இங்கே வந்ததை நேர்மறையாக பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.