பிரதமர் ‘ரோடு ஷோ’வில் மாணவர்கள்: காவல் துறை விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் சென்றது தொடர்பாக பெற்றோர்கள் எதுவும் புகார் அளித்தார்களா? நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடன் இருந்தார்களா? இந்த வழக்கில் சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும் என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கடந்த மார்ச் 18-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவையில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில், தனியார் பள்ளிக்கு எதிராக சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியை புகழ்வடிவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தவறானது. குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தியதாக கூறுவது உண்மைக்குப் புறம்பானது. பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பள்ளி நிர்வாகத்தின் மீது காவல் துறையினர் பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது. மேலும், மனுவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி தலைமை ஆசிரியை தரப்பில், “பிரதமர் நிகழ்ச்சி காரணமாக மாணவர்களை அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம். பெற்றோரால் அழைத்துச் செல்லப்படாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்கு சென்றனர். அதற்கு எப்படி பள்ளி நிர்வாகம் பொறுப்பேற்க முடியும்?” என வாதிடப்பட்டது.

அப்போது, அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், “இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்திய பின்னர் புகார் அளிக்கப்பட்டது. பிரதமர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர்” என்று பதிலளித்தார்.

காவல் துறை தரப்பில், “அரசு நிகழ்ச்சியில் பிரதமர் என்ற முறையில் மோடி கலந்து கொண்டிருந்தால் அதில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறில்லை. எனவே, அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது தவறு. நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் குழந்தைகளை நிற்க வைத்தது, அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்”, என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் சென்றது தொடர்பாக பெற்றோர்கள் எதுவும் புகார் அளித்தார்களா? நிகழ்ச்சியில் இருந்தபோது பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடன் இருந்தார்களா? இந்த வழக்கில் சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும் என விளக்கம் அளிக்க, காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அப்போது, ”பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டிக்க வேண்டுமென” மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பள்ளி நிர்வாகம் மீது மறு உத்தரவு வரும் வரை கடும் நடவடிக்கைகளை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.