அரசியல் களத்திலும் விவாதமாக வெடித்த கேரள பெண் மேயர் – பஸ் டிரைவர் மோதல்… தொடரும் சர்ச்சை!

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், தனது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ மற்றும் குடும்பத்தினருடன் காரில் சென்றபோது கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிரைவர் யதுகிருஷ்ணா ஆபாச சைகை காட்டியதாக புகார் கூறியிருந்தார். ஆனால், பஸ்ஸை முந்திச்செல்ல முயன்றபோது வழிவிடவில்லை எனக்கூறி பஸ்ஸின் முன்பு காரை குறுக்கே நிறுத்தி தன்னிடம் ஆர்யா ராஜேந்திரனும், அவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ-வும் தகராறில் ஈடுபட்டதாக டிரைவர் யதுகிருஷ்ணா கூறினார். ஆர்யா ராஜேந்திரனுக்கு ஆதரவாக ஒரு சாராரும், யது கிருஷ்ணாவுக்கு ஒரு சாராரும் குரல் கொடுப்பதால் கேரளாவில் இந்த விவகாரத்தில் இன்னும் விவாதம் தொடர்கிறது.

நடிகை ரோஸ்னா ஆன்றோ ராய்

இதற்கிடையே நடிகை ரோஸ்னா ஆன்றோ ராய் வெளியிட்ட ஃபேஸ்புக் வீடியோவில், “ஆர்யா ராஜேந்திரனுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்தது. திருச்சூர் குன்னங்குளத்தில் ரோடு வேலை நடந்தபோது யது கிருஷ்ணா பஸ்ஸை அதி வேகமாக ஓட்டி வந்து எனது காருக்கு பின்னால் தொடர்ச்சியாக ஹாரன் அடித்தபடி ஓவர் டேக் செய்தார். பஸ்ஸுக்கு பின்னால் நானும் ஹாரன் அடித்தபடி சென்றேன். அப்போது பஸ்ஸை நிறுத்திய யது கிருஷ்ணா என்னை பெண் என்றும் பாராமல் அசிங்கமாக திட்டினார். இதுபற்றி நான் பொது வெளியில் பேசினால் நீதி கிடைக்கும் என அப்போது எனக்கு தோன்றவில்லை” என்றார். நடிகை குரல் கொடுத்ததை தொடர்ந்து “நான் மட்டும் அல்ல” என தனது முகநூலில் பதிவு செய்தார் ஆர்யா ராஜேந்திரன். ஆனால், நடிகை கூறிய குற்றச்சாட்டை மறுத்துள்ளார் யது கிருஷ்ணா.

இந்த மோதலில் மேயர் ஆர்யா ராஜேந்திரன் கொடுத்த புகாரில் டிரைவர் யது கிருஷ்ணா மீது வழக்கு பதிந்துள்ளது போலீஸ். அதே சமயம் பஸ்ஸை வழிமறித்து தகராறு செய்ததாக டிரைவர் யது கிருஷ்ணா கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து மேயர் ஆர்யா ராஜேந்திரன், எம்.எல்.ஏ சச்சின் தேவ் மற்றும் காரில் இருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேன்டும் என திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் டிரைவர் யது கிருஷ்ணா. கோர்ட் உத்தரவுபடி ஆர்யா ராஜேந்திரன், அவரது கணவர் சச்சின் தேவ் எம்.எல்.ஏ உள்ளிட்டவர்கள்மீது ஜாமீன் இல்லாத பிரிவில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. விரைவில் மேயர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

சச்சின் தேவ் எம்.எல்.ஏ- மேயர் ஆர்யா ராஜேந்திரன்

இதற்கிடையே பஸ்ஸில் இருந்த சி.சி.டி.வி கேமராவின் மெமரி கார்டு காணாமல் போன விவகாரத்தின் பின்னால் மேயர் ஆர்யா ராஜேந்திரனின் அதிகார தலையீடு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் கூறுகையில், “மெமரி கார்டு காணாமல் போன விவகாரத்தில் அரசியல் சதி உள்ளது. அரசு பஸ்ஸை வழிமறித்து, பயணிகளை இறக்கிவிட்ட மேயர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கே.எஸ்.ஆர்.டி.சி-க்கும், போலீஸூக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேயருக்கு ஒரு நீதி, டிரைவருக்கு ஒரு நீதி என இரட்டை நிலைபாடு எடுக்கக்கூடாது” என்றார்.

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிரைவர் யது கிருஷ்ணா

இந்த விவகாரம் அரசியல் விவாதமாக வெடித்ததை தொடர்ந்து சி.பி.எம் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ மாநில செயலாளார் வி.கே.சனோஜ் ஆர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். வி.கே.சனோஜ் கூறுகையில், “ஆர்யா ராஜேந்திரன் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர் என்பதால் சமூக வலைத்தளங்களிலும் அவரை வேட்டையாடுகிறார்கள். இதை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக சிலர் கருதுகின்றனர். ஆனால், பெண்களிடம் மோசமாக நடந்துகொண்டது உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியவர்தான் யது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்” என்றார்.

மேயர்- பஸ் டிரைவர் மோதலில் கேரளா அரசியலில் தொடர்ந்து விவாதங்கள் எழுந்துவருகின்றன.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.