DC v RR: மிரட்டிய டெல்லி; சஞ்சு சாம்சன் ஏமாற்றப்பட்டாரா? எப்படி வென்றது டெல்லி?

“போட்டி எங்களின் கையில்தான் இருந்தது. ஓவருக்கு 11-12 ரன்கள்தான் தேவைப்பட்டன. நிச்சயமாக அது எட்டக்கூடியதுதான். ஆனாலும் எங்களால் எடுக்க முடியவில்லை. இதுதான் ஐ.பி.எல்.” – வேகவேகமாக வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்து கண்ணெதிரே பேருந்தைத் தவறவிடுபவரை போலப் பேசியிருக்கிறார் சஞ்சு சாம்சன்.

Sanju Samson

அவர் சொல்வதைப் போல இது ராஜஸ்தானின் கையில் இருந்த போட்டிதான். ஆனால், கடைசியில் ஒரு சில ஓவர்களில் நன்றாகச் செயல்பட்டதன் விளைவாக டெல்லி அணி இந்தப் போட்டியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானம் பேட்டிங்கிற்கு ஏற்ற மைதானம். கணக்கின்றி ரன்களைக் குவிக்கலாம். நேற்றும் எந்த மாற்றமும் இல்லை. முதலில் பேட் செய்த டெல்லி அணி அதிரடியாக ஆடி 221 ரன்களைச் சேர்த்திருந்தது. மூன்று வீரர்கள் இந்தப் பெரிய ஸ்கோரிற்கு மிக முக்கிய காரணமாக இருந்தனர். பவர்ப்ளேயில் மெக்கர்க், இளம் வீரர். இந்த சீசனில் டெல்லி அணியின் சொத்து. ஓடி ஓடி ரன்கள் எடுப்பதற்கெல்லாம் இவரின் கிரிக்கெட் புத்தகத்தில் இடமே இல்லை. வானத்தை நோக்கிய செங்குத்தான பேட் லிஃப்டோடு வருகிற பந்துகளை அப்படியே அள்ளி பவுண்டரிக்கு வாரி விடுவதுதான் இவரது ஸ்டைல். நேற்றும் அதே அதிரடியை அற்புதமாக வெளிக்காட்டியிருந்தார். ட்ரெண்ட் போல்டயே ஓட ஓட விரட்டியிருந்தார். அவர் ரவுண்டு தி விக்கெட் ஓவர் தி விக்கெட் என மாறி மாறி வீசிப் பார்த்தும் எதுவும் பலனளிக்கவில்லை.

DC v RR – மெக்கர்க்

முதல் 4 ஓவர்கள் முடிகையில் டெல்லி அணியின் ஸ்கோர் 59. மெக்கர்க்கின் ஸ்கோர் 50. அரைசதத்தைக் கடந்துவிட்டார். நடப்பு சீசனில் இதற்குள் மூன்று முறை 20 பந்துகளுக்கு கீழாகவே அரைசதத்தை அடித்திருக்கிறார். ஐ.பி.எல் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனை இது.

வேகப்பந்து வீச்சாளர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதால் அஷ்வினை பவர்ப்ளேக்குள்ளேயே அழைத்து வந்தார் சாம்சன். மெக்கர்க்கைத் தாண்டி யோசித்து அவரை வீழ்த்துவது சிரமம் என்பதால் அவர் வழியிலேயே சென்று வம்படியாக ஒரு புல்டாஸை வீசி கவர்ஸில் கேட்ச் ஆக வைத்தார் அஷ்வின். பவர்ப்ளேயை மெக்கர்க் பார்த்துகொண்டதை போல மிடில் ஓவர்களை அபிஷேக் பொரேலும் டெத் ஓவர்களை ஸ்டப்ஸூம் பார்த்துக்கொண்டனர். அபிஷேக் பொரேல் 180 ஸ்ட்ரைக் ரேட்டில் 65 ரன்களை அடித்திருந்தார். ஆரம்பத்தில் மெக்கர்க்குக்கு வழிவிட்டு ஓரமாக ஆடிவிட்டு அவர் அவுட் ஆனதற்கு பிறகு இவர் வேலையை காட்டத் தொடங்கினார்.

DC v RR

ட்ரிஸ்ட்டன் ஸ்டப்ஸ் 14 வது ஓவரில் உள்ளே வந்தார். 200 ஐ சுற்றி அடங்கியிருக்க வேண்டிய ஸ்கோரை 220 ஆக உயர்த்தினார். சஹாலின் ஒரே ஓவரில் 16 ரன்கள். கடைசியாக சந்தீப் சர்மா ஓவரில் அவுட் ஆவதற்கு முன்பு இரண்டு சிக்ஸர்கள் என அசத்தினார். 20 பந்துகளில் 41 ரன்களை அடித்திருந்தார். டெல்லியின் ஸ்கோரும் 221 ஆக உயர்ந்தது.

DC v RR

ராஜஸ்தான் அணிக்கு ஓர் இமாலய டார்கெட். இப்படி ஒரு டார்கெட்டிற்கு ஓப்பனர்கள் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்திருக்க வேண்டும். அது ராஜஸ்தானுக்கு நடக்கவில்லை. கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் காலி. பட்லர் கொஞ்ச நேரம் நின்றிருந்தாலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அக்ஸர் படேல் பந்தில் போல்டாகி வெளியேறினார். 17 பந்துகளில் 19 ரன்கள். அவ்வளவுதான் அவரின் பங்களிப்பு. ஆனாலும் ராஜஸ்தான் அணி பவர்ப்ளேயில் 67 ரன்களை எடுத்திருந்தது. காரணம், சாம்சன். கேப்டன் என்கிற பொறுப்போடு ஆடினார். கொஞ்சம் நின்று நேரம் எடுத்து பெரிய இன்னிங்ஸாக தனது ஆட்டதை எடுத்துச் செல்வதுதான் இந்த இன்னிங்ஸில் சாம்சனின் பாணி. ஆனால், நேற்று ஆரம்பத்தில் ஒரு மொமண்டம் வேண்டும் எனும்போது அதற்கேற்ற வகையில் ஆரம்பத்திலிருந்தே ஏறக்குறைய 250+ ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தார். பவர்ப்ளே முடிந்த பிறகு ரியான் பராக் கொஞ்சம் கைகொடுத்தார். சிறியதாக ஒரு பார்ட்னர்ஷிப் உருவாவதைப் போலத் தோன்றியது. ஆனால், அவரும் 27 ரன்களில் ராசிக் சலாம் பந்தில் அவுட் ஆகினார்.

இதன்பிறகு சுபம் ஒன்றிரண்டு பவுண்டரி சிக்ஸர்களை அடித்து உதவிபுரிந்தார். ஆனாலும் நம்பிக்கையாக இருந்தது சாம்சன்தான். வேகவேகமாக சதத்தை நெருங்கினார். அவர் சதமடித்து கடைசி வரை நின்று விட்டால் போட்டியை ராஜஸ்தான் தான் வெல்லும் என்பது உறுதியாக தெரிந்தது. ஆனால், அதிலும் ஒரு ட்விஸ்ட் நடந்தது.

DC v RR

86 ரன்களில் முகேஷ் குமார் பந்தில் சாம்சன் ஒரு பெரிய ஷாட்டிற்கு முயற்சி செய்தார். ஷாய் ஹோப் பவுண்டரி லைனில் அதை கேட்ச் செய்தார். ஷாய் ஹோப்பின் கால் பவுண்டரி லைனில் பட்டதை போல இருந்தது. ஆனால், மூன்றாவது நடுவர்கள் கொஞ்சம் சிரத்தையெடுத்து கூடுதலான கோணங்களில் பார்க்காமல் சீக்கிரமாக அவுட் கொடுத்தனர்.

DC v RR

இதில் சாம்சனும் ராஜஸ்தான் அணியும் கடும் அதிருப்தி. போதாக்குறைக்கு கேலரியிலிருந்து டெல்லி அணியின் உரிமையாளர்களும் சாம்சனை நோக்கி எரிச்சலூட்டும் வகையில் சைகைகளைச் செய்திருந்தனர். இந்த மாதிரியான சமயங்களில் நடுவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதுவும் தொடரின் மிக முக்கிய போட்டி இது.

சாம்சன் அவுட் ஆனவுடன் ஆட்டம் அப்படியே டெல்லி பக்கமாக மாறத் தொடங்கியது. குல்தீப் யாதவ் 18வது ஓவரில் டோனோவன் பெரேரா, அஷ்வின் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். இந்த ஓவர் டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்து கொடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றியை பெற்றது.

DC v RR

டெல்லி அணியின் வெற்றியால் பிளேஆப்ஸ் ரேஸ் இன்னும் சுவாரஸ்யமடைந்திருக்கிறது. சென்னை, சன்ரைசர்ஸ், டெல்லி, லக்னோ என நான்கு அணிகளும் 12 புள்ளிகளும் அடுத்தடுத்து இருக்கின்றன. பிளேஆப்ஸூக்குள் செல்ல இந்த 4 அணிகளுக்குள்ளும் கடுமையான போட்டி நிலவக்கூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.