புதுவையில் நெசவுக் கூலி அகவிலைப்படியில் கூடுதலாக 20% உயர்வு: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: தொழிலாளர்கள் நெசவுக் கூலி அகவிலைப்படியில் 20 சதவீதம் ஆகஸ்ட் முதல் உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி கூட்டுறவுத் துறை கைத்தறி பிரிவு மறஅறும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் சார்பில் புதுச்சேரியில் 11-வது தேசிய கைத்தறி தினவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாநில முதல்வர் ரங்கசாமி பேசியது: ”கைத்தறி கடுமையான, பாரம்பரிய தொழில். முன்பெல்லாம் நம் மக்களுடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமான தொழில். நெசவு தொழில் குடும்பம் எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது என்று எண்ணி பார்க்க வேண்டும். இளையோர் ரெடிமேட், வேறு ஆடைகள் உபயோகப்படுத்தினாலும் கைத்தறியை பயன்படுத்துங்கள்.

புதுச்சேரியில் இருந்து கைத்தறி ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது. விவசாயத்துக்கு அடுத்து கைத்தறி தொழில் தான் புதுச்சேரியில் இருந்தது. இன்று பாதுகாக்க வேண்டிய தொழிலாக உள்ளது. 150 குடும்பங்கள் தான் தற்போது உள்ளதாக சொல்வார்கள். மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை. சிரமமான தொழில் இது. தற்போது கைத்தறி நலிவடைந்துள்ளது.

கல்வி வளர்ச்சில் அனைத்து குடும்பத்தினரும் உயர்கல்வி பெற்றுள்ளனர். மருத்துவர்கள், பொறியாளர்கள், செவிலியர்கள் என எல்லாரும் படிக்கிறார்கள். படித்தோர் இத்தொழிலுக்கு வருவதில்லை. கல்வி மூலம் பெரிய நிறுவனத்துக்கு வேலை செல்கிறார்கள். வெளிநாட்டுக்கு செல்கிறார்கள். வசதி வாய்ப்பு ஏற்படுகிறது.

தொழில் செய்வோர் எண்ணிக்கையும், கைத்தறி ஆடை வாங்குவோரும் குறைந்துள்ளனர். கைத்தறி ஆடையை வாங்கி அக்குடும்பத்துக்கு வருவாய் தர வேண்டும். உயர்கல்வி பெறுவதால் பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். அதனால் நம் மாநிலத்திலும் உள்ளது. கைத்தறி தொழிலை வளர்க்க உதவிகள் செய்து தருவோம்.

பிரதம நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தில் நெசவு செய்யும் தொழிலாளர்கள் நெசவுக் கூலியில் தற்போது பெற்று வரும் அகவிலைப்படியில் கூடுதலாக 20 சதவீதம் உயர்த்தி ஆகஸ்ட் முதல் தரப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.