இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில் பட்ஜெட்டை வரவேற்று பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். அவர் உரையில், “தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையைப் பெற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துகள். இது நாட்டின் “நாரி சக்தி” (பெண் சக்தி) வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.

நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள், பெண்களால் நடத்தப்படும் சுய உதவிக்குழுக்களில் இணைந்துள்ளனர். இந்தப் பட்ஜெட் அவர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான புதிய விடுதிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு அவர்களின் கல்விக்கு உதவும்.
இந்தப் பட்ஜெட் முடிவில்லாத வாய்ப்புகளுக்கான நெடுஞ்சாலையாகும். இது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தைப் பலப்படுத்துகிறது. ‘விக்சித் பாரத் 2047’ திட்டத்திற்கான வலுவான அடித்தளம் இது.
இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ் இந்தப் பட்ஜெட் மூலம் புதிய வேகத்தைப் பெறும். இந்தச் சீர்திருத்தங்கள் இந்திய இளைஞர்கள் உயரே பறக்கத் திறந்த வெளியை வழங்குகின்றன. இது நம்பிக்கை அடிப்படையிலான நிர்வாகத்தைப் பூர்த்தி செய்கிறது.
நிதிப்பற்றாக்குறை மற்றும் பணவீக்கத்தைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதுடன், அதிகப்படியான மூலதனச் செலவின இலக்குகளையும் நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் 140 கோடி மக்கள், வேகமாக வளரும் பொருளாதாரமாக இருப்பதோடு மட்டும் திருப்தியடையாமல், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற விரும்புகிறார்கள்.

சமீபத்திய ஐரோப்பிய ஒன்றியத்துடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் உட்பட வர்த்தக ஒப்பந்தங்கள் இந்தியாவின் இளைஞர்களுக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் பயனளிக்க வேண்டும். இந்தப் பட்ஜெட் அந்தத் திசையில் நடைபோடுகிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம், பொருளாதார வளர்ச்சியின் வேகம் அதிகரிக்கும். நாட்டின் மிகப்பெரிய மூலதனமே அதன் குடிமக்கள்தான். கடந்த சில ஆண்டுகளில் அவர்கள் மீது நாங்கள் அதிக முதலீடு செய்துள்ளோம்.
இது இளைஞர்களின் எண்ணங்கள், ஆசைகளைப் பிரதிபலிக்கும் ‘யுவ சக்தி’ (இளைஞர் சக்தி) பட்ஜெட் ஆகும். இந்தப் பட்ஜெட் புதிய தலைவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், படைப்பாளர்களையும் உருவாக்கும். இந்தியாவை உலகளாவிய தரவு மையமாக மாற்ற வரிச்சலுகைகள் மற்றும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் இதில் உள்ளன.
சுற்றுலாத் துறையை, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த பட்ஜெட் எடுத்துள்ள நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. விவசாயம், மீன்வளம் மற்றும் பால்வளத் துறைகளில் எனது அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக தேங்காய், முந்திரி, சந்தன உற்பத்தியை மேம்படுத்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் கவனிக்கத்தக்கவை. இதன் மூலம் கிராமங்களில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றார்.