டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள விவேக் விகார் பகுதியில், இன்று அதிகாலை 4 மணிக்கு நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது.
கட்டிடத்தின் 2வது மாடியில் பற்றிய தீ மளமளவென மூன்று மற்றும் நான்காவது மாடிக்கும் பரவியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.
தீவிபத்தில் சிக்கிக்கொண்ட 12க்கும் அதிகமானோரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தீவிபத்தில் கட்டிடம் முழுக்க எரிந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயணைப்புத் துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத் இது குறித்து கூறுகையில், ”அதிகாலை 4 மணிக்கு தீவிபத்து குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. 14 வண்டிகளில் சென்று தீயை இரண்டு மணி நேரத்தில் அணைத்துவிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டோம்” என்று தெரிவித்தார்.

தீவிபத்தில் இறந்த 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இன்னும் 4 முதல் 5 பேரைக் காணவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தீவிபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றாலும் ஏ.சி வெடித்து இத்தீவிபத்து நடந்திருக்கவேண்டும் என்று அக்கட்டிடத்தில் வசித்த ஒருவர் குறிப்பிட்டார்.
அதே கட்டிடத்தில் வசித்த மற்றொருவர் இது குறித்து கூறுகையில், ”எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரைக் காணவில்லை. தீயணைப்புத் துறையினர் பால்கனி வழியாக 20 பேரை மீட்டனர்” என்றனர். தீயணைப்புத் துறையினர் காணாமல் போனவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.