தமிழ் சினிமாவில் திறமை இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை கைதூக்கி விடும் ஹீரோக்களில் சசிகுமாருக்கு தனி இடம் உண்டு. 10க்கும் மேற்பட்ட இயக்குநர்களை அவர் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘மை லார்டு’ படங்களின் வெற்றிக்கு பின் அடுத்து கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். கதை தேர்விலும் சமூக அக்கறையுடன் கவனம் செலுத்தும் சசிகுமார், இப்போது நடித்து வரும் படங்களின் அப்டேட் குறித்து விசாரித்ததில் கிடைத்தவை இது.
புதுமுக இயக்குநர்களின் படங்களை தேர்வு செய்வது குறித்து நமக்களித்த பேட்டியில் கூட அவர், “கடவுள் எனக்கு அப்படி ஒரு கொடுப்பினை கொடுத்திருக்கிறதா நினைக்கறேன். ஒருத்தரோட திறமையை வளர்த்து விடுவதில் உறுதுணையா இருப்பது பெருமையா இருக்கு. யாருக்கும் கிடைக்காத ஒரு விஷயம் எனக்கு கிடைத்தது என்பதும் சந்தோஷம்” என சொல்லியிருக்கிறார். ராஜூமுருகன் இயக்கத்தில் நடித்த ‘மை லார்ட்’ படத்திற்கு பின் ‘எவிடென்ஸ்’ நாநா’, மீண்டும் ராஜூமுருகனின் படம், ‘வதந்தி2’ வெப்சீரிஸ் என பிசியாக உள்ளார்.
அடுத்து ‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை இயக்கிய ஆர்.டி.எம். டைரக்ஷல் ‘எவிடென்ஸ் #8’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஃபேமிலி க்ரைம் டிராமாவான இதில் வெட்டிங் போட்டோகிராபராக நடிக்கிறார். சசிகுமாரின் அப்பாவாக கஸ்தூரி ராஜா நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரக்கின்றன.

இதனை அடுத்து ‘லீலை’ ‘கொலைக்காரன்’ படங்களை இயக்கிய ஆண்ட் ரூ லூயிஸ், இப்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் கதையை எழுதியுள்ளார். ஆண்ட் ரூ லூயிஸ் இதற்கு முன் இயக்கிய ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப்சிரீஸ் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அமேசானில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்போது ‘வதந்தி 2’வை இயக்கியிருக்கிறார். இதில் சசிகுமார் நடிக்கிறார். காவல்துறை அதிகாரியாக வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த வெப்சீரீஸும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஆண்டனி நடித்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமாரின் டைரக் ஷனில் அடுத்து ‘நா நா’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார். இன்னொரு ஹீரோவாக சரத்குமாரும் நடித்திருக்கிறார். “ஒரு கடைக்கோடி கிராமத்துல இருக்கற ஒரு எளிய மனிதனை, இந்த சமூகம் எப்படி உருமாற்றுகிறது என்பதுதான் படத்தின் கதை. சசிகுமாரோட கேரக்டர் பெயர் நா.நாராயணன்.. அதைத் தான் சுருக்கமா ‘நா நா’னு டைட்டிலாக்கிட்டோம்.” என்கிறார் இயக்குநர். இப்படமும் ரெடியாகி ரிலீஸுக்கு காத்திருக்கிறது.
இப்போது அறிமுக இயக்குநர் பாலா அரண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பாலாஜி சக்திவேல், சண்முகராஜன் என பலரும் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக புதுமுகம் அம்ருதா நடிக்கிறார். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருக்கும் அம்ருதாவுக்கு தமிழில் முதல் படமாகும்.
இது தவிர மீண்டு ராஜூமுருகன் இயக்கத்தில் கமிட் ஆகியிருக்கிறார் சசிகுமார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் நிறைவடைந்திருக்கிறது. நடிகர்- நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. ‘மை லார்ட்’போல இதில் சமூக அக்கறையான கதை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.
தனித் தொகுதிகளில் அதிலும் ஊரக உள்ளாட்சியமைப்புகளிலுள்ள தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு ஏற்படும் தீண்டாமைகளையும், அவர்கள் படும் வலிகளையும் எடுத்து சொன்ன ‘நந்தன்’ இரா.சரவணனின் இயக்கத்தில் அவர் நடிக்க ரெடியாகிறார் சசிகுமார். இரா.சரவணன் இதற்கு முன் ‘சங்காரம்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். அந்த நாவலை படித்த சசிகுமார் அதன் நூல் வெளியீட்டு விழாவில் ‘சங்கார’த்தின் கதாபாத்திரமான மார்ட்டின் கேரக்டரில் நடிக்க ரெடியாகி விட்டதாக’ பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, மீண்டும் டைரக்ஷனில் இறங்கவும் திட்டமிட்டுள்ளார். வரலாற்று கதைகள், நாவல்களை விரும்பி படித்து வரும் சசிகுமார், அடுத்து ஒரு பீரியட் ஃபிலிமை இயக்குகிறார். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்து வருவதாக தகவல்.