மார்ச் மாதம் மிகச் சில படங்களே ரிலீஸ் ?

கொரோனா ஒமிக்ரான் அலையால் சினிமாத் துறை இந்த 2022ம் வருடத் துவக்கத்திலிருந்தே தள்ளாடிக் கொண்டிருந்தது. கடந்த வாரம் வெளிவந்த 'வலிமை' படம் தமிழ் சினிமாத் துறைக்கு மீண்டும் ஒரு சக்தியைக் கொடுத்துள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களைப் போல் அல்லாமல் இந்த மார்ச் மாதத்தில் நிறைய படங்கள், வசூலைத் தரும் படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மாதத்தில் சில படங்கள் மட்டுமே வெளியாகும் என்று தெரிகிறது.

நாளை மார்ச் 3ம் தேதி நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகும் 'ஹே சினாமிகா' படம் வெளியாக உள்ளது. அதற்கடுத்த வாரம் மார்ச் 10ம் தேதி சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படமும், தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகியுள்ள பிரபாஸ் நடித்த 'ராதேஷ்யாம்' படமும் வெளியாகிறது. மார்ச் 11ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'மாறன்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறது.

பின்னர் மார்ச் மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையான 18ம் தேதி படங்கள் வெளியாக தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். மார்ச் 10ல் வெளியாகும் 'எதற்கும் துணிந்தவன், ராதேஷ்யாம்' ஆகிய படங்களுக்கு வரவேற்பு கிடைத்தால் 18ம் தேதி புதிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. இன்னொரு காரணமும் இருக்கிறது. மார்ச் 25ம் தேதி ராஜமவுலி இயக்கியுள்ள தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்' தமிழிலும் டப்பிங் ஆகி இங்கும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் இந்த மார்ச் மாதம் சிறிய பட்ஜெட் படங்கள் வெளிவர அதிக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்த பெரிய படங்களே மார்ச் மாதத்தை தங்களுக்கான மாதமாக மாற்றிவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.