ஐதராபாத் பப்பில் போதை விருந்து- நடிகரின் மகள், பிக்பாஸ் பிரபலம் உள்பட 142 பேர் கைது

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் பப்பில் நேற்று போதைப் பொருள் பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், பப்பில் இருந்த விஐபிகள், நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் என சுமார் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த பப்பில் இருந்து தடை செய்யப்பட்டுள்ள கோகோயின் போன்ற போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள 142 பேரில் தெலுங்கு நடிகர் நாக பாபுவின் மகளும், மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மருமகளுமான நிஹாரிகா கொனிடேலாவும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தனது மகளுக்கும் போதை மருந்து பயன்பாட்டுக்கும் எந்த தொடர்பு இல்லை என்று நடிகர் நாக பாபு வீடியோ வெளியிட்டார்.

இவர்களை தவிர, பாடகரும், பிக் பாஸ் 3 தெலுங்கு ரியாலிட்டி ஷோவின் வெற்றியாளருமான ராகுல் சிப்ளிகுஞ்சும் ஒருவர். இவர், கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஐதராபாத் காவல்துறை போதைப் பொருளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தபோது அதற்கான பாடலை பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் மகள், தெலுங்கு தேசம் எம்பியின் மகன் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்.. இளம்பெண்களை போதை மாத்திரைக்கு அடிமையாக்கி விபசாரத்தில் தள்ளி சீரழித்த வாலிபர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.