‘விஸ்டன்’ கவுரவ பட்டியலில் இந்திய வீரர்கள்

லண்டன்,
கிரிக்கெட்டின் ‘பைபிள்’ என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் இதழ் இங்கிலாந்தில் இருந்து வெளியாகிறது. கிரிக்கெட் தகவல்களை தாங்கி வரும் இந்த இதழில் வீரர்களின் பெயர் இடம் பிடிப்பது கவுரவமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விஸ்டன் பதிப்பில் சிறந்த வீரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, நியூசிலாந்து பேட்ஸ்மேன் டிவான் கான்வே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் மற்றும் தென்ஆப்பிரிக்க வீராங்கனை டேன்வான் நிகெர்க் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கடந்த சீசனில் விளையாடிய போட்டிகளில் படைத்த சாதனைகள் குறித்து வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் டெஸ்ட் போட்டியில் 1,708 ரன்கள் குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதேபோல் கடந்த ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் 288 ரன்கள் சேர்த்த தென்ஆப்பிரிக்க வீராங்கனை லிசெல் லீ உலகின் முன்னணி வீராங்கனையாக தேர்வாகி இருக்கிறார். 
அத்துடன் கடந்த ஆண்டில் 27 இருபது ஓவர் போட்டியில் விளையாடி 1 சதம், 11 அரைசதம் உள்பட 1,329 ரன்கள் குவித்து உலக சாதனைபடைத்தபாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை 20 ஓவர் போட்டியில் உலகின் முன்னணி வீரராக விஸ்டன் குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.