“இந்தியா யார் என்பதை உலக நாடுகள் வரையறுக்க வேண்டாம்'' – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

டெல்லியில் ரைசினா சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் போலந்து, உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பேச்சு எழுந்தது. அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இரண்டு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா விரும்புகிறது. போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

உக்ரைன் – ரஷ்யா

ஆசியாவில் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்த போது ஐரோப்பிய நாடுகள் எங்கே சென்றன. உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்க மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் இந்தியா நடுநிலை தன்மையை கையில் எடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் இந்தியர்கள் யார் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். உலகை மகிழ்விப்பது விட, நாம் யார் என்று புரிந்து கொண்டு நமது கொள்கைகள் அடிப்படையில் அனைத்து விஷயங்களையும் அணுக வேண்டும்.

இந்தியா ரஷ்யாவுடனான அதன் வரலாற்று வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து வருகிறது. இந்தியா யார் என்பதை உலக நாடுகள் வரையறுக்க வேண்டாம். மற்றவர்கள் எங்களை எப்படி வரையறுக்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், மற்ற நாடுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தை பின்னுக்குத் தள்ள வேண்டிய தருணத்தில் இந்தியா உள்ளது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.