மாணவர்களிடையே அதிகரிக்கும் தற்கொலைகள்… மனதளவில் ‘வீக்’காக இருக்கிறதா இளம் தலைமுறை?!

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையை யாரும் மறக்க முடியாது. பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்ற அவரால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. அதனால், அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், சோகத்தையும் அனிதாவின் மரணம் ஏற்படுத்தியது. அத்தகைய துயரம் ஒரு தொடர்கதையாக நீடிப்பதுதான் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மாணவர்கள் தற்கொலை

தற்போது, கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்துவந்த மாணவியின் மரணத்துக்கு எதிரானப் போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்திருக்கிறது. அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் கூறும் நிலையில், தங்கள் மகள் கொலைசெய்யப்பட்டிருப்பதாக அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகிறார்கள். அது கொலையா, தற்கொலையா என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.

மாணவி மரணம் ஏற்படுத்திய பதைபதைப்பு அடங்குவதற்குள், பெரம்பலூரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற பிளஸ் 2 தேர்வி 529 மதிப்பெண்கள் எடுத்த நிஷாந்தி என்ற மாணவி, நீட் தேர்வில் தோல்வியடைந்தார். மீண்டும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த அவர், தேர்வுக்கு முந்தைய நாள் தற்கொலை செய்துகொண்டார்.

அரியலூர்மாணவி அனிதா

இதே நேரத்தில் இன்னொரு துயரம். சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயமடைந்த அந்த மாணவி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மெத்தனப் போக்குதான், வன்முறை சம்பவம் ஏற்படக் காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், மேச்சேரியில் ஒரு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றுவிட்டார். அவர், ‛‛மாணவியிடம் விசாரித்தபோது, குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்ய முயன்றதாகத் தெரிவித்திருக்கிறார். தற்கொலை முயற்சிக்கு பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ காரணம் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்தார்.

மாணவி தற்கொலை

தற்போது, இதேபோன்ற ஒரு சம்பவம் காஞ்சிபுரத்திலும் நிகழ்ந்திருக்கிறது. காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவர் பிளஸ் 1 படித்துவருகிறார். அவர் திடீரென பள்ளியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். காயமடைந்த அவர், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

சமீபத்தில் மாணவர்களிடையே தற்கொலை செய்துகொள்ளும் போக்கு அதிகரித்திருப்பதற்கான காரணங்களை மனநல மருத்துவர் சித்ரா அரவிந்த் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“சமீபகாலமாக, மாணவர்களுக்கு படிப்பு தொடர்பான அழுத்தம் அதிகரித்திருக்கிறது. பள்ளிகளில் படிக்கும் டீன் ஏஜ் மாணவர்களிடையே தற்கொலைகள் அதிகமானதற்கு இதுவொரு முக்கியக் காரணம். கட் ஆஃப் மார்க் அதிகமாகிவிட்டது, படிப்பில் போட்டி அதிகமாகிவிட்டது, படிப்புச் சுமை அதிகமாகிவிட்டது. இதெல்லாம் முக்கியக் காரணங்கள். கொரோனாவுக்குப் பிறகு, இந்தப் பிரச்னைகள் அதிகமாகியிருக்கின்றன. வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்பில் படித்தார்கள். நேரடி வகுப்புகளுக்கு சென்ற பிறகு, பாடங்களை சரியாக கவனிக்க முடியாமல் பல மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மத்தியில்கூட படிக்கும் திறன் குறைந்திருக்கிறது. பழைய நிலைக்குச் செல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது.

டாக்டர் சித்ரா அரவிந்த்

முன்பெல்லாம், நிறைய விஷயங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால், நம்பிக்கையும் சகிப்புத்தன்மையும், பொறுப்புணர்வும் இருந்தன. ஒரு குழந்தை இருக்கிற பெற்றோர்கள், தங்கள் குழந்தையின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுகிறார்கள். பொருளாதாரத்தில் வளமாக இல்லாத குடும்பங்களிலும்கூட, நாம் பட்ட கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக்கூடாது என்று நினைக்கிறார்கள். வேண்டியதெல்லாம் எளிதாகக் கிடைப்பதால், அந்தக் குழந்தைகளுக்கு மன வலிமை இல்லை.

கொரோனாவுக்குப் பிறகு மாணவர்கள் சந்திக்கிற பிரச்னைகளை அரசும், கல்வி நிறுவனங்களும், ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஊரடங்கு நேரத்தில் பள்ளிகள் மூடிக்கிடந்தபோது, குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை. அப்படியிருக்கும்போது, நீட் தேர்விலும், பள்ளித் தேர்வுகளிலும் கடுமை காட்டக்கூடாது. ஒரு பேட்ச் மாணவர்களுக்காவது படிப்பிலும் தேர்வுகளிலும் ஓர் ஆண்டுக்கு சற்று தளர்வு கொடுத்திருக்கலாம்.

கொரோனா காலத்துக்குப் பிறகு, பயமும் பதற்றமும் பலரிடம் அதிகரித்துள்ளது. அதுபோன்ற டீன் ஏஜ் பிள்ளைகள் ஆலோசனைக்காக என்னிடம் அதிகமாக வருகிறார்கள். இந்த சிறிய வயதில் ஏராளமான பிரச்னைகளுடன் அவர்கள் இருப்பதைப் பார்க்கிறேன். நிறைய அறிவும், சுதந்திரத் தன்மையும் அவர்களுக்கு இருக்கின்றன. பெற்றோர்மீது அவர்களுக்கு நம்பிக்கை குறைந்திருக்கிறது. புதிய கோட்பாடுகளுடன் அந்தப் பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், அந்த கோட்பாடுகளில் வேர் இல்லாத தன்மை இருக்கிறது. அது நல்லதல்ல.

டீன்ஏஜ் எனப்படும் பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை, அவர்களின் பெற்றோர்கள் நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை முதல் மூன்று வருடங்கள் எப்படி கவனமாகப் பார்த்துக்கொள்வோமோ, அதேபோல, பதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகளை மூன்று-நான்கு ஆண்டுகளுக்கு கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அந்த வயதில், பெற்றோர்களை நம்புவதைவிட, நண்பர்களைத்தான் அவர்கள் நம்புவார்கள். எனவே, நண்பர்களைப் போல பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

டீன்ஏஜ்

மனக்குழப்பங்களோ, தற்கொலை எண்ணமோ பிள்ளைகளுக்கு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, அப்படியான எண்ணங்கள் இருப்பது தெரிந்தால், அவர்களிடம் பக்குவமாகப் பேசி பிரச்னைகளை அக்கறையுடன் காதுகொடுத்து கேட்டு, அவற்றை தீர்கக் வேண்டும். அதை மீறிப்போனால், கவுன்சிலிங்க் அல்லது மனநல மருத்துவர்களிடம் அவர்களை அழைத்துச்செல்ல வேண்டும்.

பதின்பருவத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழும். அப்போது, அவர்களுக்கு நிறைய குழப்பங்களும், தடுமாற்றங்களும் இருக்கும். நாம்தான் பெரிய ஆள் என்கிற மனோபாவமும் மேலோங்கும். அவர்கள் நினைக்கிற ஒரு விஷயம் நமக்கு சாதாரண ஒன்றாகத் தெரியும். ஆனால், அவர்களுக்கு அது பெரிய விஷயமாக இருக்கும். உறவுகளில் ஏற்படும் தோல்வியை தாங்கக்கூடிய மனது அப்போது அவர்களுக்கு இருக்காது. சகிப்புத்தன்மையும் பொறுப்புணர்வும் இருக்காது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு பெற்றோர்கள் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.