நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் வாங்க அளித்த ஆதார் நகலை பயன்படுத்தி, பல லட்ச ரூபாய் கடன் பெற்று பண மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவர் கூலி வேலை செய்த வரும் நிலையில், ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கனரா வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் அவர் கடன் பெற்றதாகவும், அதனை கட்ட வலியுறுத்தியும் அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான அவர், நோட்டீஸ் குறித்து சந்திரசேகரபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்று கிளை மேலாளரிடம் விளக்கம் கேட்ட நிலையில், சரியான பதிலளிக்காததால் வங்கி முன்பு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வங்கி மேலாளர் மற்றும் வங்கியின் மண்டல பொது மேலாளர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், நோட்டீஸ் பெறப்பட்ட சீதாலட்சுமி கடன் வாங்காதது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவரது ஆதார் நகலை பயன்படுத்தி, கையெழுத்து மாற்றி பெறப்பட்டு 5 லட்ச ரூபாய் கடனாக பெற்று மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், தவறு நடந்திருப்பது உண்மை என கூறிய வங்கி அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.