விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமால் மகன் சீனிவாசன் (21). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரபு(21) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று மாலை 4 மணியளவில் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கோல்டன் சிட்டி அருகில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் பைக் அதிவேகமாக வந்து இவர்கள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பன் இறந்த துக்கத்தால் மனம் உடைந்த பிரபு இரும்பு பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து பிரபுவை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, எழுந்து வெளியே சென்ற பிரபு வீட்டின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் எழுந்த பெற்றோர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறினர். தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து பிரபுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பன் இறந்த சோகத்தில் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக்ததை ஏற்படுத்தி உள்ளது.