தமிழக அரசின் அகழ்வாய்வுகள் மூலம் வரலாற்றுக்கு புதிய தரவுகள், தகவல்கள்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை: தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தரவுகளையும், தகவல்களையும் தெரிவித்து வருகின்றன என தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

மதுரை திருமலை நாயக்கர் மகாலில் இன்று தமிழக தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், யாக்கை மரபு அறக்கட்டளை, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சாா்பில், உலக மரபு வார விழாவை முன்னிட்டு ‘தமிழக நடுகல் மரபு’ கண்காட்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமை வகித்தார். தொல்லியல்துறை ஆணையர் (பொறுப்பு) சிவானந்தம் முன்னிலை வகித்தார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் சுந்தர் கணேசன் வரவேற்றார். பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத் தொல்லியலாளர் சாந்தலிங்கம் சிறப்புரை ஆற்றினார்.

இக்கண்காட்சியை தமிழக தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியது: “தமிழகம் பண்பாட்டு கூறுகளில், பண்பாட்டு தொடர்ச்சிகளில் மனித இனம் இந்திய நிலப்பரப்பில் தோன்றியதில், ஏறத்தாழ 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் மனித இனம் தோன்றியிருக்க கூடும் என்பதற்கு ஆய்வு ரீதியான முடிவுகள் நிறைய உண்டு. பொதுவாக ஒரு இனம் தோன்றி அந்த இனம் தொடர்ச்சியாக நிலப்பரப்பில் வருகிறபோது பண்பாட்டு தொடர்பில் முழுமைபெறாமல் ஆங்காங்கே இடைவெளிகள் ஏற்படக்கூடும். ஆனால் தமிழ்ச் சமுதாயத்தின் வரலாறும் பண்பாடும் உற்றுநோக்கினால் பழைய கற்காலம், நுண்கற்காலம் தொடங்கி இன்றுவரை ஒருமனித இனம் எல்லா வகையான நாகரிகத்துடன் தொடர்ச்சியான பண்பாட்டுகளில் நிலைபெற்றிருப்பது தமிழ்ச் சமூகம் மட்டுமே.

தமிழ்நாடு அரசு சார்பில் நடந்து வரும் அகழ்வாய்வுகள் வரலாற்றுக்கு புதிய தகவல்களையும், தரவுகளையும் தெரிவித்து வருகிறது. இரும்பின் காலம் இந்தியாவின் எந்த பாகத்தை காட்டிலும் நம்முடைய தமிழ்நாட்டில்தான் முதலில் துவங்கியிருக்கிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாட்டை அறிந்த சமுதாயமாக தமிழ்ச்சமுதாயம் இருக்கிறது என்பதற்கு மயிலாடும்பாறையில் நமது தொல்லியல்துறை நிகழ்த்தியிருக்கும் ஆய்வுகள் திட்டவட்டமான முடிவுகளை தந்திருக்கிறது.

ஒருகாலத்தில் நடுகல் மரபு என்பது சங்ககாலத்தில் கிடையாது என்ற கருதுகோள் இருந்தது. புலிமான்கொம்பை கல்வெட்டு கிடைத்தபிறகுதான் சங்ககாலத்திலும் நடுகல் மரபு இருப்பதாகவே சிலர் ஒத்துக்கொண்டனர்.

அரசர்களுக்காக உயிர்நீத்தவர்களுக்கு மட்டும் நடுகல் எழுப்பவில்லை. போரில் உயிர் நீத்து வீரமரணம் அடைந்தவர்களுக்கும் நடுகல் எழுப்பும் முறையை இந்த தமிழ்ச்சமுதாயம் பெற்றிருக்கிறது. விவசாயத்தின் துணைத்தொழிலாக இருக்கக்கூடிய கோழிக்கும், நன்றி மறவாத நாய்க்கும் நடுகல் எடுத்துக்கொண்டாடிய இனம் தமிழினம்.

நமது முன்னோ்கள் எழுத்து முறை, தொழில், கல்வி, வேளாண்மை, நகர நாகரிகத்தில் முழு வளர்ச்சி பெற்ற சமுதாயமாக இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையை இன்றைய இளைய சமுதாயத்தினர் தெரிந்து கொள்ள வேண்டும். நமது வரலாற்றை இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ள தமிழக முதல்வர் தொல்லியல் துறை சார்பில் மேற்கொள்ளும் ஆய்வுகளுக்கு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். அதனையொட்டி மதுரை திருமலை நாயக்கர் மகாலில் ரூ.13 கோடி மதிப்பில் பல்வேறு புனரைமைப்பு பணிகள் நடைபெறவுள்ளன, என்றார்.இதில், மதுரை தெற்கு தொகுதி தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், குமரவேல் ராமசாமி யாக்கை மரபு அறக்கட்டளை குமரவேல் ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.