அதிமுக அவ்வளவுதான் வலிமை போய்விட்டது… அழகிரி வருத்தம்!

தமிழகத்தில் அதிமுக அதன் வலிமையை இழந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்திபவனில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘ஆர்எஸ்எஸ், பாஜக சித்தாந்தத்தை, மதவெறி தாக்குதல்களை தடுப்பது என்ற ஒற்றைக் கொள்கையில் இணைந்து எங்கள் கூட்டணி பயணிக்கிறது.

அதிமுகவால் இந்த கொள்கையை எப்போதும் ஏற்க முடியாது. அதிமுக மெகா கூட்டணி அமைத்தாலும், அவர்களை இயக்கப்போவது மோடி மற்றும் அமித்ஷா தான்.

அதிமுக தற்போது பாஜக மோடியின் மறுஉருவமாக உள்ளது. அதிமுக வேறு இயக்கத்தில் நடித்துதான் வருகிறது. அதனால் தமிழகத்தில் பழைய வலிமையை அக்கட்சி மீண்டும் பெற முடியாது.

காசி தமிழ்ச் சங்கத்தின் நிகழ்வில் மோடி பங்கேற்றிருந்தாலும் பாஜக அதனை உரிமை கொண்டாட முடியாது . தமிழ்நாடு அறநிலையத் துறை செலவு செய்து 200 பேரை காசிக்கு அனுப்பியுள்ளது. நியாயமாக தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு தான் அந்த பெருமை சேரும். பாஜக இதில் உரிமைக் கொண்டாட நினைப்பது வாடகை வீட்டுக்கு உரிமை கொண்டாடுவது போல் ஆகும்.

ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வதால் மக்களிடம் உள்ள வரவேற்பைப் பார்த்து பலர் அச்சத்தில் மிரண்டுபோய் உள்ளனர். அவரை தடுத்து நிறுத்தவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைமையிடமான சத்தியமூர்த்தி பவனில் கடந்த வாரம் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே அடிதடி அரங்கேறியது. இதில் அழகிரிக்கு மிகவும் நெருங்மானவராக அறியப்படுபவரும், எம்எல்ஏவுமான ரூபுி மனோகரன் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும் திமுக -காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது போன்ற சில நிகழ்வுகள் தமிழக அரசியல் அரங்கில் அண்மை காலமாக அரங்கேறி வருகின்றன். இவை குறித்து எல்லாம் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் கே.எஸ். அழகிரி பெரிதாக எதுவும் பேசியதாக தெரியவில்லை. மாறாக அதிமுக, பாஜக குறித்து மட்டுமே அவர் பிரதானமாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி உள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு சென்னை ஐஐடி சார்பிலும், தமிழகத்தில் இருந்து இந்த நிகழ்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களின் வசதிக்காக இலவச பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வைபவத்துக்கு அறநிலையத் துறைதான் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும் என்று அழகிரி கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.