புதுடில்லி,:அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும்படி, மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பீஹார், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் அம்மை பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மஹாராஷ்டிராவின் மும்பை மாநகராட்சி மற்றும் பல மாவட்டங்களில், ௧௦க்கும் மேற்பட்ட குழந்தைகள் அம்மை நோய்க்கு பலியாகின.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலர் அசோக் பாபு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து அந்தந்த மாநிலங்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அம்மை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதலாக ஒரு ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தலாம்.
வழக்கமாக, ஒன்பது முதல் ௧௨ மாதங்களில் முதல் டோஸ், ௧௬ முதல் ௨௪ மாதங்களில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒன்பது மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான குழந்தைகளுக்கு கூடுதல் டோஸ் செலுத்தலாம்.
இதேபோல், முதல் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement