பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் – வாகன ஓட்டிகள் அவதி

பூந்தமல்லி பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பூந்தமல்லி வழியே ஸ்ரீபெரும்புதூர் வரை பல்வேறு பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சாலை பூந்தமல்லி முதல் திருமழிசை கூட்டு சாலை வரை, காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
image
கன மழை காரணமாக சாலைகள் சேதமுற்ற நிலையில், அதிக வாகன போக்குவரத்து; காரணமாகவும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் இருந்து நசரத்பேட்டையில் இணையும், பூவிருந்தவல்லி முதல் நசரத்பேட்டை பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் இணைவதால் நசரத்பேட்டை சிக்னல் முதல் பூவிருந்தவல்லி வரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.
இதனால் பூந்தமல்லி முதல் திருமழிசை கூட்டு சாலையை கடக்க சுமார் அரைமணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை ஆவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர். இதேபோல் மாலை நேரத்தில் செம்பரம்பாக்கம் முதல் பூந்தமல்லி வரை சுமார் நான்கு முதல் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் இந்த வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதோடு போக்குவரத்து நெரிசலில் சிக்கி மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
image
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்… தினமும் இதேபோல் தான் வாகனங்கள் சிக்கிச் செல்வதாகவும் இது தங்களுக்கு பழகிவிட்டதாக வேதனையோடு தெரிவித்தனர். மேலும் சாலை கடக்க அரைமணி முதல் ஒருமணி நேரம் வரை ஆவதால் கடும் அவதிக்கு உள்ளாவதாக தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.