ஸ்டாலின் தலைமையில் நம்ம ஊரு திருவிழா: கனிமொழி நேரில் ஆய்வு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச் செயலாளர்

கருணாநிதி எம்.பி மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பொங்கல் பண்டிகையின்போது தமிழக நாட்டுப்புறக் கலையின் கலாச்சார திருவிழாவான ‘நம்ம ஊரு திருவிழா’ சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நம்ம ஊரு திருவிழா நடத்துவதற்கான ஆய்வை திமுக எம்.பி., கனிமொழி மேற்கொண்டார். சென்னையில் உள்ள சிவன் பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா, செம்மொழி பூங்கா ஆகிய பகுதிகளில் ‘நம்ம ஊரு திருவிழா’ நடத்துவதற்கான ஆய்வை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோர் மேற்கொண்டனர்.

நாட்டுப்புறக் கலைகளுக்கு மாபெரும் அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களின் கலைக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் நம்ம ஊரு திருவிழா என்ற நிகழ்ச்சி நடத்தப்படும் என்று 2022-2023ஆம் நிதியாண்டில் சட்டமன்ற பேரவையின் மானியக் கோரிக்கையின்போது தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நடைபெறும் ‘நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென்-ட்ரைவில் பதிவு செய்து, மண்டல உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த 2006 – 2011 ஆட்சி காலத்தில், கனிமொழி கருணாநிதியின் முன்னெடுப்பில் 2007ஆம் பொங்கல் பண்டியின்போது சென்னையில் பல்வேறு இடங்களில் ஒருவார காலம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சென்னை சங்கம் விழா என்ற பெயரில் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மைதானத்தில் கடந்த ஜூலை மாதம் 4 நாட்களுக்கு நெய்தல் திருவிழாவை வெற்றிகரமாக கனிமொழி எம்.பி., தலைமை தாங்கி நடத்தினர். சென்னை சங்கமம் மற்றும் நெய்தல் கலைத் திருவிழா பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.