100 நாள் வேலை திட்டத்தில் அதிரடி மாற்றம்!!

நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் இன்று முதல் NMMS செயலி மூலம் வருகைப் பதிவு செய்தால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாள் உடல் உழைப்பைக் கொண்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

100 நாட்கள் வேலை தர தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், 2022இல் 11.37 கோடி குடும்பங்கள் வேலை பெற்றுள்ளன. NEFMS மென்பொருள் கொண்டு ஆதார் இணைப்பு மூலம் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக, இந்த திட்டத்தின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் விதமாக, 2022 மே மாதம் சில முக்கிய மாற்றங்களை மத்திய அரசு மேற் கொண்டது. அதன் கீழ், 20க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட பணித்தளங்களில் கையால் எழுதப்படும் வருகைப்பதிவேடு நிறுத்தப்பட்டது.

இந்த தளங்களில் உள்ள பணியாளர்கள் புவிசார் புகைப்படத்துடன் கூடிய NMMS செயலி மூலமே வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல் (ஜனவரி 1, 2023) 20க்கும் குறைவான பணியாளர்கள் பணி புரியும் பணித்தளங்களிலும் NMMS செயலி மூலம் மட்டுமே வருகைப் பதவி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் பணி செய்து வந்தால், இந்த செயலி மூலம் காலை, மாலை என இரு வேலைகளிலும் வருகைப் பதிவு செய்ய வேண்டும். செயலி மூலம் வருகைப் பதிவு செய்யாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.