காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி: செய்தியாளர்களுடன் அண்ணாமலை வாக்குவாதம்

சென்னை: காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள தமிழக பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (ஜன.4) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழியனுப்புவேன். விலகுபவர்கள் யாரும் என்னை புகழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. என் மீது அனைவரும் தான் விமர்சனம் வைக்கிறார்கள். அதற்கான பதில் என்னுடைய மவுனம் தான்.

திமுக அமைச்சர் தொடர்பான ஆடியோ ஒன்று வந்தது. நீங்கள் அதை 48 மணி நேரம் கூட வெளியிடவில்லை.அவர்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாமா?. திமுகவிடம் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் உள்ளதா? நான் அந்த ஆடியோவை அளிக்கிறேன். நீங்கள் வெளியிடுவீர்களா? அதைவிடுத்து என்னிடம் கதை சொல்லாதீர்கள்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து ” நீங்கள் எந்த சேனல்? நீங்கள் எந்த சேனல்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் கட்சி சேனல் நடத்துபவர்கள் எல்லாம் என்னிடம் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். இதன்பிறகு கேள்வி கேட்பவர்களிடம் சேனல் பெயர், உங்களின் பெயர் சொல்லுங்கள் என்று தெரிவித்தார். இதன் காரணமாக அண்ணாமலைக்கும் செய்தியாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.