சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான கடிதத்தில் உள்ளது சஸ்பென்ஸ் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மத்திய சட்ட ஆணையம் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் வந்தது. இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளித்து கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,”2024ம் ஆண்டில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒன்றாக நடந்தால் தமிழக மக்களுக்கு பெரிய பொங்கல் கொண்டாட்டமாக இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 16ம் தேதிக்குள் கடிதம் அனுப்ப வேண்டும். இது அதிமுகவின் கொள்கை முடிவு. இதை பொது வெளியில் கூற முடியாது. கடிதம் அனுப்பிவிட்டோம். கடிதத்தில் என்ன இருக்கிறது என்பது சஸ்பென்ஸ். எல்லாருக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் மகிழ்ச்சி தான். திமுகவிற்கு மட்டும் இது வயிற்றில் புளியை கரைக்கும் விஷியமாக உள்ளது. 16ம் தேதிக்கு பிறகு மத்திய சட்ட ஆணையம் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கட்சிகளின் பட்டியலை வெளியிடும்.” இவ்வாறு அவர் கூறினார்.