`உங்களுக்கு மாட்டுப்பொங்கல்னா…எங்களுக்கு யானை பொங்கல்!’-வனத்துறையினரின் நெகிழ்ச்சி செயல்

பொள்ளாச்சி அடுத்த கோழி கமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை வனத்திற்கும், வனத் துறையினரின் பல்வேறு பணிகளுக்கும் உதவியாக இருந்துவரும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
image
இந்நிலையில், இந்தாண்டு கோழி கமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. யானை பொங்கல் விழாவில் யானைகளை குளிப்பாட்டி, பொட்டிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு, வாழை, கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட சத்தாண உணவுகள் யானைகளுக்கு வழங்கப்பட்டது.
image
இந்த யானை பொங்கல் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். வழக்கமாக தமிழர்கள் மாட்டுப் பொங்கல், பூப்பொங்கல் ஆகியவையே கொண்டாடும் நிலையில், யானைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடபட்ட இந்த யானை பொங்கல் விழாவில் கலந்து கொள்வது புது அனுபவம் என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட யானைகளை பாரத்தது பரவசமளித்தது என்றும் அவர்கள் கூறினர்.
image
மேலும் பேசுகையில், “வனத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும் யானைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. அந்த வகையில் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ள வனத்துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது” என சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.