புதுடெல்லி: உள்நாட்டில் தயாரான உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து இன்கோவேக் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாசி வழியே கொரோனா தடுப்பு மருந்து செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதன்படி, இன்கோவேக் எனப்படும் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டது. இதற்கு கடந்த டிசம்பர் இறுதியில் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த மருந்து இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை ஒன்றிய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைக்கிறார்.
வருகிற பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து சந்தையில் இந்த நாசி வழி தடுப்பு மருந்து கிடைக்கப்பெறும் என கூறப்படுகிறது. இதன்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோசாக இதனை பயன்படுத்த முடியும். தனியார் மருத்துவமனைகளுக்கு இதன் விலை ரூ.800 என விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325க்கு விற்பனை செய்யப்படும். கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்களும், பூஸ்டர் டோசாக நாசி வழியே செலுத்தும் இன்கோவேக்கை எடுத்து கொள்ளலாம். கொரோனாவுக்கு நாசி வழி செலுத்தப்படும் முதல் தடுப்பு மருந்து இதுவாகும்.