மனிதநேய தொழிலாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு 44 வகையான சட்டங்களை நீக்கி பெரும் தொழிற் சாலை முதலாளிகளுக்கு ஆதரவாக நான்கு தொகுப்பு சட்டங்களை கொண்டு வந்திருப்பதை மனிதநேய தொழிலாளர் சங்கம் எதிர்க்கிறது. தமிழகத்தில் வீட்டு பணியாளர்களுக்கு சமூக பணி பாதுகாப்பு, ஊதிய நிர்ணயம், வார விடுமுறை ஆகியவற்ற தமிழக அரசு அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். பாஜகவிடம் தன்னை அடமானம் வைத்துள்ள அதிமுக கட்சி தற்போது குழப்ப நிலையில் இருக்கிறது. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய திராவிட கொள்கைகளுக்கு எதிராக ஓட்டை பிரிக்க பசுந்தோள் போர்த்திய நபராக நாம் தமிழர் கட்சியின் சீமான் பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். கோவை ஈஷா யோகா மையம் தொடர்ந்து மர்மமான முறையில் செயல்பட்டு வருவதன் காரணமாக தமிழக அரசு அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.