ஆளுநரை சந்தித்து தவெக தலைவர் விஜய் நாளை ஆட்சியமைக்க உரிமைக் கோரிய நிலையில், ஆளுநர் இன்னமும் எந்த முடிவையும் சொல்லவில்லை. தவெகவிடம் பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்கள் யாரென ஆளுநர் பட்டியல் கேட்டதாகவும் தகவல். இந்நிலையில், மிகப்பெரிய திடீர் திருப்பங்களை நோக்கி தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருப்பதாக பேசத் தொடங்கியிருக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

‘தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஆட்சியமைக்கப் போகிறது. இது மக்களின் முடிவுக்கு எதிரானது’ என அரசியல் விமர்சகர்களும் மூத்த பத்திரிகையாளர்கள் சிலரும் சமூகவலைதளங்களில் எழுத, அரசியல் களம் அனலாக மாறியிருக்கிறது.
இதுசம்பந்தமாக விவரமறிந்தவர்களின் வட்டாரத்தில் விசாரிக்கையில், ‘திமுக தலைமை நேற்றே இப்படியொரு ஐடியாவோடு அதிமுக தலைமையை அணுகியது. ஆனால், அதிமுகவுக்கு இதில் பெரிய உடன்பாடு இல்லை. யதார்த்தமான முரண்பாடுகளை காரணம் காட்டி இதெல்லாம் சரிபட்டு வராது என மறுத்துவிட்டார்கள்.
இதன்பிறகு இரு தரப்புக்குமே சில அதிர்ச்சிகள் காத்திருந்தது. உடன் நிற்பார்கள் என நம்பப்பட்ட காங்கிரஸ் ஆதரவுக் கடிதத்தோடு விஜய்யை போய் சந்தித்தது. அதேமாதிரி, அதிமுகவிலும் ஒன்றிரண்டு முக்கிய தலைகள் தவெகவுடன் கூட்டணி சேரும் முனைப்பில் எடப்பாடி பழனிசாமியை நெருக்கினர். இதுபோக, பாஜகவின் டெல்லி தலைமையும் விஜய் ஆட்சியமைப்பதை விரும்பவில்லை என்கின்றனர்.

விஜய்யின் சில மூவ்கள் டெல்லியை ரொம்பவே காயப்படுத்தியிருக்கிறது. அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் விஜய் வென்றவுடன் பிரதமர் மோடி வாழ்த்தினார். அதற்கு 20 மணி நேரம் கழித்துதான் விஜய் நன்றி கூறினார். அதுவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்ட மோடியின் ஐடியை டேக் செய்யாமல், பிரதமர் அலுவகத்தின் ஐடியை டேக் செய்து விஜய் நன்றி கூறியிருந்தார். விஜய்யின் இந்த அட்டிடியூட் டெல்லியின் ஈகோவை சீண்டியது.
போதாக்குறைக்கு காங்கிரஸின் ஆதரவையும் விஜய் பெறுகிறார். இதெல்லாமே டெல்லியை உஷ்ணப்படுத்தவே, தமிழகத்தின் மிக முக்கிய புள்ளி ஒருவரை அவர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர்.
‘அதிமுக ஆட்சி அமைக்கட்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வராகட்டும். விஜய்யை அதிகாரத்தை எட்டவிட வேண்டாம்’ என்கிற மெசேஜோடு அந்த மிக முக்கிய விஐபி புள்ளி திமுக தலைமையை சந்தித்திருக்கிறார். திமுக தலைமையை விட அவர்களின் வாரிசே விஜய் ஆட்சிமைக்கக் கூடாது என தீவிரமாக இருக்கிறார். வாரிசின் விருப்பத்தால் அந்த மிக முக்கிய விஐபி புள்ளி கொண்டு வந்த மெசேஜை திமுக தலைமை தீவிரமாக கருத்தில் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்தே இன்று மாலை திமுக மேலிடம் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு ஏற்கனவே பேசிய ஐடியாவை மீண்டும் வலியுறுத்துகின்றனர்’ என்றவர்கள் மேலும் பேசுகையில், ‘எடப்பாடிக்கும் திமுகவின் ஆபரை ஏற்க வேண்டிய தேவை கட்சிக்குள்ளேயே உருவாகியிருக்கிறது.

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி போன்றோர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதிகாரத்தை சுவைக்க விரும்புகின்றனர். அவர்களும் எடப்பாடியை நெருக்குகின்றனர். நேற்று வந்த விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அதிகாரத்தில் ஒட்டிக் கொள்வதை விட, திமுக ஆதரவோடு ஆட்சியமைப்பது மேல் என எடப்பாடி கணக்குப் போட்டிருக்கிறார்.
தொடர்ந்து திமுகவின் ஆபரை வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற சீனியர்களிடமும் முன்வைத்திருக்கிறார். ‘இதெல்லாம் எப்படி சாத்தியம். திமுக நமக்கு ஆதரவு கொடுக்குறதை கட்சிக்காரங்க எப்படி பார்ப்பாங்க? எப்படி ஒத்துப்பாங்க?’ என எடப்பாடியிடம் எதிர்க்கேள்வி கேட்டிருக்கின்றனர். அதற்கு, ‘ஏற்கனவே நாம் 5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. இன்னொரு 5 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமல் போனால் கட்சியை எப்படி காப்பாற்ற முடியும்? ஆட்சியமைத்து விடுவோம்.
அதன்பிறகு எம்.எல்.ஏக்களை வாங்கி சரிகட்டிக் கொள்ளலாம்’ என சமாதானப்படுத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் ‘உங்களுக்கெல்லாம் ஒரு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. நானே விரைவில் சொல்கிறேன்’ என எடப்பாடி பொடி வைத்தும் பேசியிருக்கிறார். மேலும், கே.பி.முனுசாமியை வைத்து ‘விஜய்க்கு ஆதரவு இல்லை’ என்றும் பத்திரிகையாளர்களிடம் பேச வைத்திருக்கிறார். அத்தோடு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் சென்னையிலேயே தங்க வையுங்கள் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். தமிழக அரசியல் பெரும் திருப்பங்களுக்கு தயாராகி வருகிறது’ என்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

திரைமறைவில் நடப்பவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
‘இன்று காலை ஸ்டாலினை திருமா சந்தித்தார். அப்போது திருமா தவெகவின் அழைப்பைப் பற்றி கூற, ‘நீங்களே முடிவெடுங்கள். ஆனால், நாம் நெடுங்காலம் பயணித்திருக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’ என ஸ்டாலின் கூறியிருக்கிறார். திருமாவும் நாளை உயர்நிலைக் குழு கூட்டத்தைக் கூட்டி விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவில் இருந்திருக்கிறார். திரைமறைவு வேலைகள் சூடுபறக்கவே மீண்டும் திமுக மேலிடத்திலிருந்து திருமாவுக்கு அழைப்பு போயிருக்கிறது. ‘அவசரப்படாதீர்கள். வேறொரு திட்டம் இருக்கிறது. காத்திருங்கள்’ எனக் கூறியிருக்கின்றனராம் . இதைத் தொடர்ந்தே திருமா நாளை நடக்கவிருந்த உயர்நிலைக் கூட்டத்தை ரத்து செய்திருக்கிறார்’ என்கின்றனர் அரசியல் கூர் நோக்கர்கள்.
இதற்கிடையில் தான் திமுகவின் முன்னாள் எம்.பியான செந்தில் குமார் ‘All is fair in எங்க அரசியல்’ என குதர்க்கமாக ட்வீட்டும் செய்திருக்கிறார்.
திரைமறைவு நகர்வுகளால் தீயாய் தகதகக்கிறது தமிழக அரசியல்.
இதில் மேலும் சில விஷயங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தை கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் ஒரே அணியில் இணைந்து செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. நாம் பேசிய வரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நகர்வுகளுக்கு ஆதரவு அளிக்கும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
ஒருவேளை அப்படி ஆதரவு அளிக்காமல் போனால் மெஜாரிட்டிக்கு தேவையான எண்களை அதிமுக திமுக இணைந்து பெறுவதிலும் சிக்கல் நீடிக்கும்.

இன்னொரு புறம் திமுக அதிமுக இடையே நடக்கும் இந்த திரை மறைவு பேச்சுக்கள் ஸ்டாலினுக்கு தெரியாது என்றும் அந்த விஐபி கொண்டு வந்த தகவலின் அடிப்படையில் இப்படி ஒரு விஷயத்தை சாத்தியப்படுத்தினால் என்ன என்று தலைமைக்கு நெருக்கமான உறவுகள் தான் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், ஒருவேளை ஸ்டாலினுக்கு இந்த நகர்வுகள் தெரியவரும் பட்சத்தில் அவர் இதனை உடனே நிறுத்துவார் என்ற பேச்சும் திமுக தரப்பில் இருக்கிறது.
அரசியல் விமர்சகர்கள் பலரும் இப்படியான நடவடிக்கைகள் நடப்பதற்கு சாத்தியங்கள் இல்லை. மீறி நடக்கும் பட்சத்தில் அது ஜனநாயகத்திற்கும் மக்களின் தேர்வுக்கும் எதிரான ஒரு நகர்வாக தான் இருக்கும் என்ற கருத்தையும் பதிவு செய்கிறார்கள்.
இது எல்லாவற்றையும் கடந்துஎன்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .